பெண்களே..

உள்ளே..

பெண்களின் சுயமேம்பாட்டிற்கு - பெண்களே மதிப்புமிகு நேரத்தைப் பயனுடையதாக்குங்கள்


பதிப்புரை


தமிழ் மண்ணைவிட்டுச் சென்று அயல்நாட்டில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியையும், தமிழ் கலாச்சாரத்தையும் என்றும் போற்றி வாழ்ந்து பிறருக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவர்கள் - திருமதி. சௌந்திரநாயகியும், இவர் கணவரும். தமிழுக்குப் பெருமை சேர்க்கும் இவர்களைப் போன்றவர்களால், தமிழ் என்றும் வாழும். இந்நூலாசிரியை பன்முக ஆற்றல் கொண்டவர். மிகச் சிறப்பாக மேடையில் பாடக்கூடியவர்.

குடும்பப் பெண்கள் வீட்டின் கண்கள். ஒரு மெழுகுவர்த்தி பிறருக்கு வெளிச்சம் தருவதற்காக, தன்னையே உருக்கிக் கொள்வதைப்போல குடும்பப் பெண்களும், தன் குடும்பத்தின் நலனுக்காக தன்னை மாற்றிக்கொண்டு விட்டுக்கொடுத்து வாழ்க்கை நடத்துபவர்கள். இத்தகைய சிறப்புக்குரிய பெண்கள் கோவிலில் வைத்துக் கும்பிட வேண்டியவர்கள் என்று நூலாசிரியர் குறிப்பிடு வதில் மிகையொன்றுமில்லை. மிகச் சரியானதே.

'எனது வீடு, எனது வாழ்வு' என்று மட்டும் வாழ்வது வாழ்க்கையல்ல. அறிவியல் வளர்ச்சி உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் இக்காலத்தில் நாம் வீட்டிலிருந்தே உலக நடப்புகளை தினந்தோறும் நாளிதழ்கள், சான்றோர்கள், அறிஞர்கள் எழுதிய நல்ல நூல்கள் போன்றவற்றை வாசிப்பதன் மூலமும், பயனுள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்பதன் மூலமும் நம் பொது அறிவை வளர்த்துக் கொண்டு நம்மை நாமே

மேம்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம். அப்படி நம்மை நாம் மேம்படுத்திக் கொள்ளும்போது நம்மிடையே புத்துணர்வும், தன்னம்பிக்கையும் தோன்றும். நமக்காக மட்டும் வாழாமல் நம்முடைய சமுதாய முன்னேற்றத்திற்காகவும் பாடுபட வேண்டும் என்ற நற்சிந்தனையும் ஆர்வமும் தோன்றும்.

வீடும் நாடும் முன்னேற, வளம் பெற, பல அரிய, புதுமையான கருத்துகளுடன் சிறப்பாக இந்நூலைப் படைத்துள்ள நூலாசிரியருக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துகள். பதிப்பகத்தார்

சிவம் இல்லையேல் சக்தி இல்லை. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் உண்டு. ஒரு பெண் சரியாக இருந்தால்தான் குடும்பம் மேம்படும். இவற்றில் எது உங்களுக்கு சரி என்று படுகிறது? எனக்கு எல்லாமே சரி என்று தோன்றுகிறது!

இதற்குக் காரணம் குடும்பப் பெண் சத்தமில்லாமல் சாதனை புரிபவள்! ஒவ்வொரு பெண்ணும் என்றுமே குடும்பத்தை சரிவர நடத்தி அதில் வெற்றிகளைக் காண்பவர்கள்தான்.

பிரபல பேச்சாளர் திரு.சுகிசிவம் சொல்வதுபோல், ஒரு கோவில் கட்டிக் கும்பாபிஷேகம் நடத்துவது எளிது. ஆனால் ஒரு குடும்பத்தை நெளிவுசுளிவோடு, வளைந்துகொடுத்துப்போய் குடும்பம் நடத்துவது கடினம்.

இளம் பெண்களிடம் உங்களைக் கவர்ந்த பெண் யார்? என்று கேட்டால், ஏதோ ஒரு ஒலிபரப்புச் சாதனம் மூலம் அறிந்து கொண்ட 'மதர் தெரெஸா', 'ஜெயலலிதா' என்று சொல்வதை விடுத்து நம் அத்தை, பாட்டி, அம்மா என்று கையைக் காண்பித்தால் அது தகும்!

இந்தியாவையே ஆண்ட இந்திரா காந்தி, வீரவாள் எடுத்துப் போரில் ஜெயித்த ஜான்சி ராணி, பதக்கங்களை இந்தியாவிற்கு அள்ளிக்குவித்த தங்கமகள் பி.டி.உஷா இப்படிப்பட்டவர்கள்தான் வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் என்பது அல்ல.

என்னைப் பொறுத்தவரை தம் குடும்பத்தை இந்தச் சமுதாயத்தின் ஓர் அங்கமாக ஆக்க தினமும் போராடிக்கொண்டு இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் சாதனையாளர்களே! வீட்டுக்கு வீடு வாசப்படி என்பதைப்போல, ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனை எத்தனை பிரச்சினைகள்? ஒரு நிர்வாகத்தை நடத்தும்பொழுது, எழுதிவைக்கப்பட்ட சட்டம் ஒன்று அதற்கு உண்டு. ஒரு நிர்வாகத்தோடு ஒருவருக்கு என்றுமே பிறப்பிலேயே ஏற்பட்ட ரத்த சம்பந்தம் கிடையாது. ஆக, அந்தக் கோணத்தில் நிர்வாகத்தின் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதும் சுலபம்.

இப்படித் தேர்ச்சி பெற்றவர்கள் பின்னர் ஒரு நிறுவனத்தை நடத்தத் தகுந்தவர்கள் என்று அந்தப் பதவியில் அமர்த்தப் படுகிறார்கள். ஆனால் 'குடும்பப்பெண்' என்று பட்டம் வாங்கியிருக்கும் எண்ணற்ற பெண்கள் இதற்கான படிப்பை எந்தப் பள்ளிக்குச் சென்று படிக்கிறார்கள்?

ஆனால் அவர்கள் அழகாக குடும்பத்தை நிர்வாகம் செய்யும் அனுபவத்தில் இருந்து ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் எத்தனையோ? அந்த குடும்பப்பெண்ணுக்கு நுனிநாக்கில் ஆங்கிலம் பேசத் தெரியாது, மேடை ஏறி மணிக்கணக்கில் தத்துவம் பேசத் தெரியாது. அடுக்களையையும், குடும்பத்தையுமே வரையறுக்கப்பட்ட எல்லையாகக் கொண்டு, அதில் அவள் கற்றுக்கொண்ட பாடமெல்லாம் 'அனுசரித்துப் போ, அடக்கமாய் இரு, விட்டுக்கொடுத்துப் போ, துப்போடு வேலை செய், பாந்தமாய் இரு' என்பதுதான்.

ஆக, நிர்வாகம் செய்ய ஒரு பிரத்யேகப் படிப்பு படித்துத்தான் நிர்வாகிக்க வேண்டும் என்றில்லாமல், மேலே சொன்ன அடிப்படைப் பண்புகளையே முதலீடாகக்கொண்டு வெற்றிபெற்றுக் கொண்டிருப்பவர்கள் குடும்பப் பெண்கள். ஒரு மெழுகுவர்த்தி பிறருக்கு வெளிச்சம் தருவதற்காக, தன்னையே உருக்கிக் கொள்வதைப்போல குடும்பப் பெண்களும், தன் குடும்பத்தாரின் நலனுக்காக, தன்னையே மாற்றிக்கொண்டு விட்டுக்கொடுத்து வாழ்க்கை நடத்துபவர்கள்தான். ஆக, என்றுமே குடும்பப் பெண்கள் கோவிலில் வைத்துக் கும்பிட வேண்டியவர்கள்தான்!

இப்படிப்பட்ட குடும்பப் பெண்கள், விஞ்ஞான வளர்ச்சி அதிகம் உள்ள இந்த காலத்தில், குடும்பத்தைக் கவனித்துக் கொண்டு, வீட்டில் இருந்தவாறே சாதனைப் புரிய அதிக வாய்ப்புகள் உண்டு. குடும்ப பெண்களாக, தம் குடும்பத்தை மேம்படுத்திய வர்கள் என்ற சிறப்போடு, இந்த சமுதாயம் சிறக்கவும் தம்மால் முடிந்தவற்றை செய்து மேலும் சிறப்படைய உள்ள வாய்ப்புகளைப் பற்றி அறிந்துக்கொள்ள தொடர்ந்து வாசியுங்கள்.

இன்றைய தலைமுறையினர் கடல்கடந்து பல நாடுகளில் வாழ்கின்றனர். உள்நாட்டிலும், வெளிநாட்டுப் பொருளுக்குக் குறைவு ஒன்றும் இல்லை. விஞ்ஞான வளர்ச்சியால் ஏற்படும் மாற்றங்கள் ஒரு நாட்டின் பொருட்களை எளிதாக மற்றொரு நாட்டிற்குக் கொண்டு சேர்த்து விடுகிறது. காலமாற்றம் ஓரளவிற்கு மனமாற்றத்தையும் ஏற்படுத்தியிருப்பது, மக்களின் பொருட்கள் வாங்கும் எண்ணத்தில் பிரதிபலிக்கிறது!

அதன் விளைவு இன்றைய இளம் பெண்கள் இனம்புரியாமல் சாமான் வாங்கும் தன்மையை அதிகரித்துவிட்டிருப்பது என்பதும் உண்மை. முத்திரை பதித்த (Brand) என்று சொல்லப்படும் Hand Bag, செருப்பு, மூக்குக் கண்ணாடி மற்றும் வேறு அணிகலன்களைநாம் பயன்படுத்தினால், நாம் உயர்வான வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம் என்று அர்த்தமா? இல்லை, அதிக விலை கொடுத்து நாம் வாங்கும் அந்தப் பொருள்களுக்குத்தான் Resale Value (மறுவிற்பனை விலை) உண்டா? முத்திரை பதித்த (Brand) பொருட்கள் மிக எளிதாகக் கிடைக்கிறது என்பதால் அதை வாங்கிவிட முடிகிறது.

ஆனால் அதை பயன்படுத்துவதாலேயே நம் வாழ்க்கைத்தரம் உயர்ந்து விட்டதன் அறிகுறியாக ஒருவர் கணக்குவைத்து செயல்பட்டால், அது ஒரு பிற்போக்கான சிந்தனை; வருந்தத்தக்க ஒன்று. அது ஒரு விதத்தில் நம் பொருளாதார முன்னேற்றத்தைக் குறிப்பதாக வேண்டுமானால் ஒரு குறியீடாகச் சொல்லலாம். ஆனால் நம் வாழ்க்கை முன்னேற்றப்பாதையில்தான் போய்க் கொண்டிருக்கின்றது என்று ஒருபொழுதும் சொல்லிவிட முடியாது. உண்மையில் பணத்தால் ஏற்படும் முன்னேற்றத்தைவிட மனத்தால் ஏற்படும் முன்னேற்றமே முன்னேற்றம்!

அது என்ன மனத்தால் ஏற்படும் முன்னேற்றம்? அதை எழுத்திலோ, பேச்சிலோ அல்லது ஒரு வகுப்பிற்கு சென்று கணிதம், கணினிபோல் கற்றுக்கொள்ள முடியாது. இது ஒருவர் தினம் தினம் வாழ்க்கையில் பலவற்றின் மூலம் கற்றுக்கொண்டு ஏற்படும் ஒரு வளர்ச்சி.

ஆக, இரண்டாண்டு, ஐந்தாண்டு என்று ஒரு கால நிர்ணயித்தால் வருவது அல்ல. பல சோதனைக்கு மனிதன் தன்னை உட்படுத்தி, பலவற்றிலும் அடிபட்டு ஏற்படும் ஒரு வளர்ச்சிதான் இந்த 'மனத்தால் ஏற்படும் முன்னேற்றம்.'

Do not get carried away just by looking at the cover of the book என்பது ஒரு நல்ல பழமொழி. அப்படி ஒருவர் வைத்திருக்கும்/உபயோகப்படுத்தும் பொருளை, உடுத்தும் உடையை வைத்து, அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைந்து விட்டனர் என்று கருதுவதும் தவறு.

ஒருவர் வாழ்க்கையில் மனதளவில் முன்னேற நாம் இருக்கும் ஊரோ/நாடோ, பணமோ, படிப்போ, பதவியோ எதுவுமே ஒரு தூண்டுகோலோ, அல்லது தடையோ அல்ல. அது இவை அனைத் திற்கும் அப்பாற்பட்டது.

அந்தக் காலத்தில் பெண்கள் சேர்த்த சாமான் வகைகளுக்கு இன்று பல காரணங்களால், அது தேவையா? பாதுகாப்பது சாத்தியமா? என்று பரவலாக ஒரு நியாயமான போக்கும், கேள்வியும் நிலவி வருவது நாம் யோசித்துப் பார்க்க வேண்டிய ஒன்று. அந்தக் கட்டாயமும் இப்பொழுது ஏற்பட்டு விட்டது. இப்படி ஒரு சூழலில், என்றுமே விலைமதிப்புள்ள சாமான்களே தேவையா? என்று யோசிக்கும் வேளையில் ஒரு காசும் மதிப்பில்லாத வீணாடம்பரத்திற்கு இன்றைய பெண்கள் மதிப்புக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்பொழுது, இதுதான் 'இரண்டும் கெட்டான் நிலையோ?' என்று சிந்திக்க வைக்கிறது.

பணத்தால் ஏற்படும் முன்னேற்றத்திற்குத் தங்களை தயார்ப்படுத்திக் கொள்ளும் பெண்கள் மனத்தால் ஏற்படும் முன்னேற்றத்திற்கும் மதிப்புக் கொடுக்க தங்கள் எண்ணங்களைச் சிறிது மாற்றவேண்டும். அது பற்றி அடுத்த சில கட்டுரைகள் விளக்கும்.

நம்மை நாமே மேம்படுத்திக் கொள்வது மிக அவசியம். அப்படி நாம் நம்மை மேம்படுத்திக் கொள்ளும்போது நம்மிடையே ஒரு புத்துணர்வும் தன்னம்பிக்கையும் பிறக்கும்.

இப்பொழுது மாணவ/மாணவிகள் பெறும் மதிப்பெண்கள் நம்மை அசரவைக்கிறது. வாழ்க்கையின் பொருளாதார மேம்பாட்டிற்காக பாடப்புத்தகத்தில் புதைந்து மதிப்பெண் எனும் புதையலை எடுப்பது மிக அவசியம்தான். அது ஒருபுறம் இருக்க, தன்னைச் சுற்றி நடப்பவற்றில் கவனம் செலுத்துவது முக்கியமான ஒன்றே. இது மாணவர்களுக்கு மட்டுமல்ல, இளம் பெண்களுக்கும் தான்.

விஞ்ஞான வளர்ச்சி உச்சத்தைத் தொட்டிருக்கும் இந்தக் காலத்தில் வீட்டிலிருந்து நாம் உலகில் நடப்பவற்றைத் தெரிந்து கொள்ளலாம். மேம்போக்காக நாளிதழைப் புரட்டுவதாலோ, கணினியில் ஆனந்த விகடன், குமுதத்தைத் திறந்து, சினிமா செய்தியைப் பார்ப்பதாலோ, உலகத்தில் நடப்பவற்றை அறிந்துகொண்டு விட்டதாக அர்த்தம் கொண்டால் அது தவறு. தொலைக்காட்சியில் போகிற போக்கில் இரண்டு செய்தியைக் காதில் போட்டுக் கொண்டுவிட்டு, நாட்டில் நடப்பவற்றை நான் தெரிந்துகொண்டேன் என்று சொல்வதும் தவறு.

நம் வீட்டு வேலை/அலுவலக வேலை/சொந்த வேலை, சொந்தபந்தம் -இவற்றிற்கு இடையே நாட்டில் நிலவும் சூழலை அறியவும், நம்மைச் சுற்றி நடப்பதை அறிந்து கொள்ளவும் விழையுங்கள்.

'எனது வீடு, எனது வாழ்வு' என்று வாழ்வது வாழ்க்கையா? இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா? தேசம் வேறல்ல, தாயும் வேறல்ல ஒன்றுதான். கடுகு போல் உன் மனம் இருக்கக்கூடாது. கடலைப்போல் விரிந்து இருக்கட்டும்' என்று 'அழகன்' படத்தில் வரும் இந்த வரிகளைப் பலமுறை உங்கள் மனங்களில் பதியவையுங்கள். உங்கள் தினசரி வாழ்க்கையில் நாட்டில் நடப்பதை அறிந்து கொள்வதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். அதற்கு ஒரு நாளில் ஒரு மணிநேரம் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு தினசரி வாசிப்பதற்கு செலவிடுங்கள். ஒருமணிநேரம் சான்றோர்கள், அறிஞர்கள் நாட்டு நடப்பைப்பற்றி எழுதுவதை வாசிப்பதற்கும் நேரத்தைச் செலவிடுங்கள்.

அப்படி வாசிக்கும்பொழுது உங்கள் மனதை அதில் செலுத்துங்கள். அப்படி வாசித்த பின்னர் இந்த உலக மேம்பாட்டில் உங்களின் பங்கு என்ன? என்று யோசியுங்கள். உங்களின் சிறு பங்களிப்பை எப்படி நீங்கள் உங்கள் வாழ்வில் செலுத்தலாம் அதற்கான வழி என்ன? என்று சிந்தியுங்கள். உங்களின் திறமை என்ன? உங்களால் முடிந்தது என்ன? எவ்வளவு நேரம் பொது வாழ்க்கையில் ஈடுபட தங்களால் முடியும் என்று யோசியுங்கள். இப்படி நீங்கள் செய்ய விழையும்போது, தங்களிடமே ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். உலக மேம்பாட்டில் தாங்களும் தங்கள் பங்கைச் செலுத்த முடியும் என்ற உற்சாகம் பிறக்கும். மனத்தால் ஏற்படும் முன்னேற்றம் அடைய இதுவே முதல்படி.

இதைத் தொடருங்கள். உங்கள் மனநிலையில் முன்னேற்றத்தை நீங்களே வெகு விரைவில் உணருவீர்கள்.

நம் அனைவருக்கும் முகத்தில் உள்ள கண், நெற்றி, புருவம், மூக்கு, வாய் இவை எந்த எந்தெந்த இடத்தில் இருக்க வேண்டுமோ, அந்த அந்த இடத்தில்தான் இருக்கிறது. யாராவது ஒருவருக்காவது மூக்கும், வாயும் இடம் மாறியிருக்கிறதா? இருக்கவே முடியாது. ஆனால், ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட அடையாளம், சாயல் வேண்டுமானால் ஒரே மாதிரி இருக்குமே தவிர, அச்சு அசலாக, இருவர் ஒரேமாதிரி இருப்பதே இல்லை. அதேபோல்தான் ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையும், குணாதிசயங்களும்.

முக அமைப்பு ஒரே மாதிரி இருப்பினும் - ஒவ்வொருவரும் பெறும் விமரிசனங்கள் - எத்தனை எத்தனை? நல்ல திருத்தம்; மூக்கும் முழியுமாய் இருக்கிறாள்; ரொம்ப சமத்துவம்; லட்சணமேஇல்லை; அஷ்டலட்சணமும் பொருந்தி இருக்கிறது; ரொம்ப அழகுன்னு சொல்ல முடியாது, இருந்தாலும் பார்க்க எடுப்பாய் இருப்பாள் - இன்னும் இதில் விடுபட்டவை எத்தனையோ?

ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையும், ஒரே மாதிரிதான். 3 வயதாகும் பொழுது பாலர்பள்ளி, 5 வயதில் தொடக்கப் பள்ளி, 13 வயதில் உயர்நிலைப் பள்ளி, பின்னர் கல்லூரிப் படிப்பு, பின்னர் வேலை அல்லது திருமணம், பின்னர் கணவன், குழந்தை என்று நமக்கென்று பொறுப்புகள். ஆக, அனைவருக்கும் இதுதான் வரையறுக்கப்பட்ட வாழ்க்கைப் பாதை! இதில் யாரோ ஒரு சிலர் மட்டுமே விதிவிலக்கு. அதேபோல் யாருக்கு என்ன குணமாக இருப்பினும், இந்த வாழ்க்கைச் சக்கரத்தில் சுழன்று ஏதோ ஒரு விதத்தில் தங்கள் பங்கை இந்த உலகில் அனைவரும் செலுத்தி வருபவர்களே!

இருப்பினும், சிலர் மாமனிதர்களாக அனைவராலும் போற்றப்படுகிறார்கள்; சிலர் ஏதோ ஒரு விதத்தில் சாதனை புரிந்தவர்கள் எனக் கருதப்படுகிறார்கள். எத்தனையோ பேர் இருந்த சுவடே தெரியாமல் மறைந்து விடுகின்றனர்.

அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் வெற்றி வாகை சூடுவதற்கும், அடுத்தவர்கள் பயன்பெற ஏதாவது செய்வதற்கும், அடுத்தவர்களின் நன்மதிப்பைப் பெறுவதற்கும் விரும்புபவர்களே ஆனால் ஏன் அனைவராலும் அடுத்தவர் விரும்பும்/போற்றும் மனிதர்களாக வாழ முடியவில்லை? இதற்கு யார் காரணம்? வாழ்வில் வெற்றி பெற, நாம் காரணமா? அடுத்தவர் காரணமா? வாழ்க்கையில் முன்னேற நமக்கு வாய்க்கப்பெற்ற ஏதோ சரி இல்லை என்று சொல்பவர்கள்தான் அனேகம் பேர். ஆனால் அது முற்றிலும் தவறு.

நம் வாழ்க்கை நம் கையில்தான். நம் வாழ்க்கையை ஒரு பொழுதும் மற்றவர்கள் தீர்மானிப்பது கிடையாது. விழிப்புணர்வோடு, நம் திறமை, நாம் வாழும் சூழல், நம் தகுதி அறிந்து நாம் செயல்பட்டால், நம் வாழ்க்கை ஒருபொழுதும் மற்றவர் கையில் சிக்க வாய்ப்பே இல்லை! நாம்தான் விதைக்கின்றோம், அதை நாம்தான் பின்னர் அறுவடை செய்கின்றோம். ஆக, நம் வாழ்க்கை நம் கையில். நம் வாழ்க்கைக்குப் பொறுப்பு நாம்தான். ஒருபொழுதும் பிறர் அல்ல என்பதைத் தெளிவாக மனதில் பதியவையுங்கள்.

'நாம் செய்த பாவம்; முன் ஜென்ம வினை; நம் மூதாதையர் து செய்த பாவம், அது இப்பொழுது தொடர்கிறது; கிரகம் சரி இல்லை; நம் ஜாதக பலன் ' இப்படிப்பட்ட நம்பிக்கைகள் இல்லாமல் இல்லை. இதை மறுக்கவும் முடியாது. இருப்பினும் இந்த சர்ச்சை மிகவும் ஆழமான ஒன்று. இந்த ஆழமான கடலுக்குள் சென்று அலசி ஆராய்வது மிகக் கடினம். எனவே, இதை ஒருபுறம் வைத்துவிடுவோம்.

வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டுமென்றால், ஒரு சராசரி மனிதனிடம் இருந்து மாறுபட வேண்டுமென்றால், முதலில் நாம் என்ன செய்ய வேண்டும்? அதற்கு முதல் படி, நம் மனதை விசாலமாக வைத்துக் கொள்ள வேண்டும். நாம் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் 'Target' (இலக்கு) என்று ஒன்று வைத்து செயல்படுவோம் அல்லவா? அந்த 'Target' மிகப் பெரிய ஒன்றாக வைத்துக் கொள்ளுங்கள்.

உதாரணமாக, நம் சித்தி மகளோ, பெரியப்பா மகளோ, அடுத்த வீட்டில் வாழ்பவர்களுடனோ, நம்மை ஒப்பிட்டு அதன்படி செயல்பட்டால், நாமும் ஒரு சராசரி மனிதனாகத் தான் செயல்பட முடியும். இதற்கு மாறாக வாழ்க்கையில் சாதனை புரிந்த மாமனிதர்கள் யாரையாவது, மனதில் வைத்து அவர்கள் எப்படி அந்த இடத்திற்கு வந்தார்கள் என்று பார்த்து, அப்படி ஒரு பெரிய "Target'-ஐ அடைய வேண்டும் என்று வரையறுத்துக் கொள்ளுங்கள். இப்படிச் செய்யும்பொழுது உங்கள் எண்ணம் மட்டுமல்ல, செயலும் விசாலமடையும். உங்களால் எவ்வளவு முடியுமோ, அந்த அளவு செயல்பட முற்படுங்கள். உங்கள் தகுதிக்கு மீறிச் சென்று வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்வதும் மிக முக்கியம்.

மனிதனுக்கு அவனை அறியாமலேயே அவனிடம் உள்ள சக்தி மிக அதிகம். இப்படி ஒரு 'Target'-ஐ பெரிதாக நாமே வைக்கும்பொழுது, நம்மிடம் நமக்குத் தெரியாமலே மறைந்திருக்கும் சக்தி ஆசையாக மாறி நம்மை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்லும்.

நாம் நமக்கு எது உகந்த துறை என்று தேர்ந்தெடுத்துக் கொள்கின்றோமோ, அந்தத் துறையில் ஒவ்வொரு வருடமும் ஒரு படியைக் கடக்க வேண்டும் என்று மனதில் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

தடை இல்லாமல் வாழ்க்கை இல்லை. எந்தத் தடை வந்தாலும், அதை எப்படியாவது செய்து முடிக்கவேண்டும் என்று முனைப்போடு செயல்படுங்கள்.

  • சாதனை புரியவேண்டும் என்று விரும்பினால், உங்களுக்குள் இருக்கும் திறமையை முதலில் அறிய முற்படுங்கள்.
  • பின்னர் தாங்கள் இருக்கும் ஊரில் அதில் நீங்கள் சாதனை புரிய என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதைப் பாருங்கள்.
  • பின்னர் உங்கள் குடும்பத்தாரின் ஒத்துழைப்போடு, நீங்கள் ஒரு நாளைக்கு அதில் எவ்வளவு மணிநேரம் செலவு செய்ய முடியும் என்று வரையறுத்துக் கொள்ளுங்கள்.
  • அந்தத் துறையில் உள்ள முன்னோடிகளுடன் பேசி அதில் உள்ள நுணுக்கங்களை அறிந்து கொள்ளுங்கள்.
  • பின்னர் ஒவ்வொரு படியாக அதில் தன்னம்பிக்கையோடு எடுத்து வையுங்கள்.
  • ஒரு வருடத்தில் நிச்சயமாக நீங்கள் வகுத்த பாதையில் ஒரு தூரத்தைக் கடந்திருப்பது உறுதி!
  • 'சிறு துளி பெரு வெள்ளம்' என்பதுபோல நாம் சிறிது சிறிதாகச் செய்யும் செயல் பெரிய வெற்றியைத் தேடித்தரும். ஆக, நாம் எதைப் போற்றுகிறோமோ, நம்மை அறியாமல் நம்முள் அது நிச்சயமாக வளரும். நம் வாழ்க்கை என்றும் நம் கையில்தான்!

பொதுவாக, யாருக்காகவும் எதையுமே யாராலும் எளிதாக விட்டுக்கொடுக்க முடியாது. சாதாரணமாக இருவரிடைய ஏற்படும் உப்புசப்பற்ற வாக்குவாதத்தில்கூட 'நாம் சொன்னதே சரி!' என்று நிரூபிக்க முடிந்தவரை மனம் பாடுபடும்.

இரண்டு சேலையில் ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டுமானால் கூட, சேலையின் நிறம், தரம், அதன் தன்மை என பலவற்றைப் பார்த்து நமக்குக் கிடைத்தது சரிதானா? என மனம் பலமுறை யோசிக்கும்.

இப்படி ஒவ்வொரு நாளும் நடக்கும் சின்னச் சின்ன செயல்களிலிருந்து சொத்துகளைப் பங்கிட்டுக் கொள்வதுவரை எளிதாக யாருக்காகவும் எதையும் விட்டுக்கொடுக்க முடியாது!

ஆனால் எதையாவது யாருக்காகவாவது, எளிதாக நம்மால் உடனே விட்டுக்கொடுக்க முடியுமென்றால் அது நாம் பெற்ற பிள்ளைகளுக்காக மட்டும்தான் சாத்தியம். நம் பெற்றோர்களுக்குக் கூட நாம் எதையும் விட்டுக்கொடுக்க நினைப்பது குறைவுதான். ஆனால் நம் பிள்ளைகளுக்காக மட்டுமே நம் வேலை, விருப்பு, வெறுப்பு, வாழ்க்கை முறை என ஆரம்பித்து, தன்மானம் வரை எதை வேண்டுமானாலும் உடனே விட்டுக்கொடுக்கத் தயாராகி விடுவோம். பிள்ளை பள்ளியில் இருந்து வர ஒரு அரைமணி நேரம் தாமதமானால் மனம் பதறும்! விளையாடப்போன பிள்ளை சற்று சுணங்கினால் மனம் சஞ்சலமடையும். இப்படி நம் வாழ்க்கையில் ஒரு இன்றியமையாத இடத்தைப் பிடிக்கும் பிள்ளையை (ஆண்பிள்ளையை) கூடப்பிறந்தவர்களுக்கு பிள்ளை இல்லை என்றால், நம் பிள்ளையை அவர்களுக்கு தத்துக் கொடுக்கும் பழக்கம் நம்மிடையே உண்டு. என் பிள்ளையை உங்களிடமே விட்டுவிடுகிறேன். அவனை நான் இனி சொந்தம் கொண்டாட மாட்டேன். இவன் இனி உங்களுடைய குழந்தை, இவன் இன்பம், துன்பம் இரண்டுமே உங்கள் கையில், இவன் இனி உங்களுடைய சொத்து என்று 'மிகப்பெரிய மனதோடு' எந்த ஒரு விலையும் மதிக்க முடியாத அந்தப் பிள்ளையை 'பிள்ளை விட்டுவிடும்' தாராளமான மிகப்பெரிய மனதிற்கு சொந்தக்காரர்கள் ஆகவும் சில நேரம் பெண்கள் ஆவதும் உண்டு.

ஒருமுறை என் தோழி என்னிடம் சொன்னாள், நாம் நன்றாக யோசித்துப் பார்த்தால், ஒரு பெண் தாயான மறு கணத்திலிருந்துஅவளுக்கு ஒருநாள்கூட ஓய்வு என்பதே இல்லை. வார இறுதி நாள், இன்று விடுப்பு என்று அவளுக்குக் கிடையாது. இரவு/பகல் என எந்நேரம் வேண்டுமானாலும் குழந்தை அழ அவளுக்கு 24 மணிநேரமும் 'on call/ on duty'யில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம்! ஆக, அவள் தனக்கு என எதையும் வகுத்துக் கொள்ளாமல், குழந்தையை ஒட்டி தன் வாழ்க்கையை வரையறுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமும், சூழலும் ஏற்பட்டு விடுகிறது. நடைமுறையில் அதுதான் உண்மை.

அதனால்தான் ஒரு ஞானி சொல்கிறார், ஒரு ஆண்மகன் துறவறம் பூண்டால்கூட, தன் தந்தையை வணங்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் என்றுமே தன் தாயின் பாதங்களை வணங்க வேண்டும். தாய் இறந்துவிட்டால் அச்சமயம் துறவறத்தைத் துறந்து, தன் தாய்க்கு ஈமச்சடங்கு செய்வது அவசியம் என்று கூறுகிறார்.

இப்படி ஒரு பெண் இதிகாசம், வரலாறு என அன்றுமுதல் இன்றுவரை போற்றப்படுவதற்குக் காரணம் அவளை அறியாமலேயே அவளிடம் உள்ள சக்திதான்! இது ஒருபுறம் இருக்க, கூடப்பிறந்தவர்களிடையே மனக்கசப்பு ஏற்பட்டு ஒருவரோடு ஒருவர் பேசாமல் இருப்பது சர்வசாதாரணமாக நடக்கிறது .இதற்கு என்ன காரணம்? உறவு முறிந்த குடும்பங்களையெல்லாம் அணுக்கமாக யோசித்தால் பாகப்பிரிவினை ஒரு காரணமாக இருக்குமென்றால், பெண்களுக்கு இடையே ஏற்படும்

உப்புசப்பற்ற காரணங்களால் உறவு முறிந்த கதை மறுகாரணமாக இருக்கும்!

'விட்டுக்கொடுத்து விட்டால் - உறவு முறிஞ்சுபோச்சு' என்ற வாக்கியத்திற்கு இடம் எங்கே இருக்கும். விட்டுக்கொடுத்துப் போங்க என்று சொல்வதும், மேடையில் பேசுவதும், இதைப்பற்றி எழுதுவதும் காலம் காலமாக நடந்து வருவதுதான்.

பெற்ற பிள்ளையை மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் நமக்கு சின்ன சின்ன விஷயங்களை விட்டுகொடுக்க மனம் வராததும் காலம் காலமாக நடந்துவருவதும் உள்ளதுதான்!

மிக எளிதாக சிலவற்றை நம் மனதில் பதியவைத்தால் நம்மை அறியாமலேயே நாம் அடுத்தவர்களுக்கு விட்டுக்கொடுத்து மனநிம்மதியைத் தேடியவர்களின் பட்டியலில் இடம்பெற்று விடுவோம்; உறவுகளை கட்டிக்காத்த உன்னதர்கள் ஆகிவிடுவோம்.

நம் உறவினர்கள் நம்மை மதிக்காமல் செய்கிறார்களோ என்று நம்மிடையே ஒரு எண்ணம் உதயமாகும்போது நிச்சயமாக நம்மை மதிக்காமல் அவர்கள் ஒன்றும் செய்யவில்லை; அவர்களுடைய இந்த நடவடிக்கைக்கு ஏதோ நம்மிடம் சொல்ல முடியாத காரணம் இருக்கலாம். நாம் இதை கண்டுகொள்ளாமல், பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டால், சூழ்நிலை மாறும்பொழுது அது சரியாகிவிடும் என்று மனதை சமாதானப்படுத்துங்கள். சரிதான் என்று அதை அப்படியே விட்டுவிடும்பொழுது, நம் மனம் அதை விரைவில் மறந்துவிடும். உறவில் விரிசல் ஏற்படாது. நம் உறவுமுறைப் பெண்கள் கடைக்குப் போனதை என்னிடம் சொல்லவில்லை, விசேஷ வீட்டில் என்னிடம் பேசாமல், மற்றவர்களிடமெல்லாம் பேசினாள்; மகளுக்கு செய்த நகையைஎன்னிடம் காண்பிக்கவில்லை; அவள் வாங்கியதை அவளுக்குக் கொடுத்ததை என்னிடம் காண்பிக்கவில்லை. இப்படிப்பட்ட பல காரணங்கள் (உப்புசப்பில்லாத) தான் சிறு சிறு மனவிரிசலில் ஆரம்பித்து 'நீ செய்தாயல்லவா, அதற்கு பதில் நான் செய்வேன்' என்று விட்டுக்கொடுக்கும் தன்மை நம்மிடம் குறைந்து கடைசியில் உறவு முறிந்துபோகும் அளவிற்கு வந்துவிடுகிறது.

நன்றாக யோசித்துப் பார்த்தால் 'இதெல்லாம் ஒரு matter-ஆ'; நம் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிடக் கூடியவையா? ஒன்றுமே இல்லையே!

'ஏதோ அவர்களுக்கு அந்த நேரத்தில், அவர்களின் மனநிலை... அப்படிச் செய்து விட்டார்கள்... நாம் இதை பெரிதுபடுத்த வேண்டாம்' என்று Easy going வழியை பின்பற்றினால் இந்தச் சிறு விஷயங்கள் சிறு விஷயங்களாகவே மறைந்துபோகும். மேலும், பூதக்கண்ணாடியோடு, சிறுவிஷயங்களைப் பார்த்தால் அது பெரிதாகத் தெரியும். Positive thinking உடன் பிரச்சினையை அணுகினால் - அது காணாமல்போகும்.

பிள்ளைக்காக எதையுமே விட்டுக்கொடுக்க முடியும். பெற்றெடுத்த பிள்ளையையே பிறருக்கு விட்டுக்கொடுக்க முடியமென்ற ஆற்றல் படைத்த பெண்களால், சிறு விஷயங்களைப் பொறுக்க முடியாமல் உறவு முறிந்துபோவது என்பது வருத்தத்திற்குரியது.

'நம் பலத்தை உணருங்கள் -விட்டுக்கொடுங்கள் - உறவுகள் மேம்படும்!'

பெண்கள் வீட்டின் கண்கள்; நம் இன்றைய தலைமுறையினர் இந்த வாக்கியத்திற்கு பங்கம் விளைவித்து விடவில்லை. நம் பாரம்பரியமிக்க தமிழ்ச் சமுதாயத்தின் தற்போதைய போக்கு சமுதாயத்தை சிறிதளவு ஆட்டம் காணவைக்கிறது என்பதில் கொஞ்சம் உண்மை இருக்கத்தான் செய்கிறது. திருமணங்கள் ஆயிரம் காலத்துப் பயிர் என்று அக்காலத்து பெண்கள், தன் கணவனுடன் மனமுறிவு வந்தாலும் கடைசி வரை அவர்கள் வாழ்க்கையை வாழ்ந்தார்கள். ஆனால் தற்பொழுது 'மணமுறிவு' என்ற சொல் அதிகம் கேட்கப்படுகிறது.

இருப்பினும் மணமுறிவு என்பது சிறிதளவில் ஆங்காங்கே தான் நடைபெறுகிறது. எதையுமே முளையிலேயே கிள்ளிவிடவேண்டும். முளையில் கிள்ளி எறியப்படாத ஒன்று விரைவாகப் பரவுவதற்கு வாய்ப்பு மிக அதிகம்.

மணமுறிவு எந்த அடிப்படையில் நடக்கிறது. ஆண்மகனோ, பெண்மகளோ வாழத் தகுதி இழக்கும் காரணத்தினால்தான் அதிகமான மணமுறிவுகள் நடைபெறுகின்றன. ஒப்புக்கொள்ள முடியாத காரணத்திற்காக ஏற்படும் மணமுறிவு ஒரு சிலவே.

எழுதுவதிலும், பேசுவதிலும் இதைத் தடுத்துவிடலாம் என்றால் நாம் அதைச் செய்யலாம். ஆனால் இந்த இரண்டு தளங்களும் தூண்டுதலாக அமையப்பெறலாமே தவிர, தீர்வு காணக்கூடிய தளங்கள் அல்ல.

பெரும்பாலான திருமணங்கள் வெற்றிப்பாதையில் தான் போய்க்கொண்டிருக்கின்றன என்பது உண்மை. ஆனால் ஆத்ம திருப்தியுடன், 'குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்' என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டாக எத்தனை பேர் தங்கள் குடும்பப் பாதையில் செல்கின்றனர்? 'விதை விதைத்து, மரங்கள் வளர்ந்து தோட்டம் செழிக்க வேண்டும். 'அன்பை' விதைத்து, ஆலமரம்போல் குடும்பங்கள் தழைத்து வளரவேண்டும்.

நல்ல அன்போடு, விட்டுக்கொடுத்து, நல்ல எடுத்துக்காட்டாக வாழும் குடும்பம் எங்களுடையது என்று எத்தனை பேரால் சொல்ல முடியும்? நமக்கும், நம் குடும்பத்தினருடைய விருப்பு வெறுப்பிற்கும் கொடுக்கும் மதிப்பைவிட சமூகத்திற்காக நம்மை நாமே மாற்றிக் கொள்ளும் தன்மைதானே அதிகம்! முற்போக்கு சிந்தனையுடைய இளைஞர்கள் சமூகம் ஏற்படுத்தியிருக்கும் வழிமுறைகளுக்கும், தனிமனித சுதந்திரத்திற்கும் இடையே ஏற்படும் உரசலை புரிந்துகொள்ள வழி தெரியாமல் சிலர் மணமுறிவிற்காக துணிந்து விடுவதும் ஒரு காரணம்.

ஒரு குடும்பம் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் கணவன் - மனைவியிடையேயும், குடும்பத்தார் அனைவரிடமும் பரஸ்பர அன்பு என்பது மிக முக்கியம். அக்காலத்துப் பெண்கள் அவர்களுக்கு வரையறுக்கப்பட்ட வட்டத்திற்குள் இருந்து குடும்பத்தை நடத்துவதில் சாதனை புரிந்து வருபவர்கள் என்றால், இக்காலத்தில் பெண்கள் படித்து, பட்டம் பெற்று, வேலைக்குச் சென்று பணம் ஈட்டும் நிலைக்கு வளர்ந்திருக்கின்றனர். தன் சொந்தக் காலில் நின்று தன் வாழ்க்கையைத் திறம்பட அமைத்துக் கொள்ள முடியும் என்ற நிலை.

அதற்காக படித்த பெண்கள், சம்பாதிக்கும் எண்ணத்தால், உடனே விவாகரத்து செய்துவிடுகின்றனர் என்கிற குற்றச்சாட்டு தவறு. ஆணுக்குப் பெண் அடிமை என்று இருந்தது ஒரு காலம். ஆனால் இந்தக் காலத்தில் அதே மனப்பான்மையோடு பெண்களை அணுகினால், 'அடிமை நாங்கள் இல்லை' என்று எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படிச் சிறிதும் யோசிக்காமல் சொல்லி விடுகின்றனர்.

ஆணுக்கு உள்ள உரிமை ஆணுக்கு என்றால் பெண்ணுக்கு உள்ள உரிமை பெண்ணுக்கு என்ற எண்ணத்தில் செயல்படும் காலம் இது! ஆக, பெண்களுக்கு உள்ள மரியாதையைகொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஆண்களிடம் மட்டுமல்ல, குடும்பத்தாரிடமும் வளரவேண்டும். இல்லையென்றால் குடும்பத்தில் உரசல் சர்வசாதாரணமாக ஆரம்பமாகும்.

நான்கு பேரைப் பார்த்து ஒவ்வொரு நாள்பொழுதும் செல்லும் பொழுது நான்கையும் பெண்கள் கற்றுக் கொள்கின்றனர். பாரம்பரியமான குடும்பத்திலிருந்து வரும் பெண்கள் நல்லவற்றை உள்வாங்கிச் செயல்படுத்தவும், கெட்டவற்றை விட்டுத் தள்ளவும் இயற்கையிலேயே கற்றுக்கொள்வர். எனவே, குடும்பத்தில் பெண்கள் ஏதாவது ஒரு கருத்தைச் சொல்லவந்தால் 'திமிரு' என்று ஒதுக்கித் தள்ளாமல் அவர்கள் எண்ணத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும்.

தம் மனைவி/மருமகளை அடக்கி வைக்காவிட்டால், அவர்கள் நம் கைமீறிப் போய்விடுவார்கள் என்று ஆண்கள் நினைத்து, அந்த எண்ணத்தில் காயை நகர்த்தினால் அங்கும் ஒரு பூகம்பம் வெடிக்க ஆரம்பிக்கும். மனைவி/மருமகள் மீது நம்பிக்கை வையுங்கள். அவர்களுக்கு அவர்களது வாழ்க்கை முக்கியம். மன நிம்மதி முக்கியம். குடும்பத்திற்கு அடங்காமல் போய் அவர்கள் சாதிக்க நினைப்பது என்னவாக இருக்க முடியும்? அவர்கள் கைமீறிப் போய் சாதிக்கப்போவது ஒன்றும் இல்லை.

ஆக, மரியாதை, அன்பு, நம்பிக்கை இவற்றை மறக்காமல் குடும்பத்தினரிடையே பரஸ்பரமாகப் பகிர்ந்தாக வேண்டும். ஒரு சாம்பாருக்கு முக்கியம் எது? உப்பா? புளியா? சாம்பார்தூளா? என்றால் எதை விட்டுக்கொடுக்க முடியும்? ஒரு சாம்பாருக்கே அந்தந்த அளவிற்குத் தேவையானவற்றை சரியாக சேர்க்கவேண்டுமானால் குடும்பம் செழித்து வளர சிலவற்றை சரியான அளவில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றல் அது மிகையாகாது.

விஞ்ஞான வளர்ச்சி உலகத்தை வெகுவாக மாற்றியிருக்கிறது. ஆனால் மனிதனின் மனம் சுருங்கிவிட்டதால் சீரழிவு ஏற்படுவதை தடுத்தாக வேண்டும்! மனித மனம் விஞ்ஞான வளர்ச்சிபோல் வளர மரியாதை, அன்பு, நம்பிக்கை இவற்றை மூலப்பொருளாகக் கொண்டு மனதை ஆரோக்கியமாக வைத்தால், சமூகத்திற்காக பெருமைப்படுவதை விடுத்து மனநிம்மதியோடு, குடும்பம் ஒரு பல்கலைக்கழகமாக வாழமுடியும்.

குடும்பத்தை வளைந்துகொடுத்துப்போய் சாதனை படைக்கும் அக்காலத்துப் பெண்களைப்போலவே, இக்காலத்துப் பெண்களும் வீட்டிலும், வெளியிலும் சாதனை புரிவார்கள்! இப்படி ஒரு சூழல் வளர்ந்தால், மணமுறிவு என்கிற வார்த்தைக்கு நம் சமுதாயத்தில் அர்த்தம் இல்லாமல் போகும்!

இக்காலத்தில், பெற்றோர் ஆண்பிள்ளைகளுக்கு நிகராகப் பெண்பிள்ளைகளை வளர்க்கின்றனர். மிக்க மகிழ்ச்சி. எகிறும் தங்கவிலை, மிரட்டும் சீதனம், இருப்பினும் பல லட்சங்கள் செலவழித்து பெண்குழந்தைகளை மேல்படிப்பு படிக்கவைப்பதற்கு பெற்றோரின் மனநிலை தயார். இதுவும் நல்ல செய்தியே! அடுப்படியும், குடும்பமுமே பெண்களின் வரையறுக்கப்பட்ட எல்லையாக இருந்த காலம் இனி இல்லை. நாட்டு எல்லையை விட்டுப் பறக்கவே பெண்கள் தயாராகிவிட்ட காலம் இது. ஆக இக்காலத்துப் பெண்கள் நல்ல படிப்புப் படிக்கின்றனர்.

நாட்டில் நிலவும் பொருளியல் கொள்கை, நல்ல இளைஞர்களுக்கு வேலை செய்யவும், பொருள் ஈட்டவும் பல வழிகளில் கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிற காலம். மேலும்,நாட்டில் நடப்பவற்றை படம்பிடித்துக் காட்ட 24 மணி நேர தொலைக்காட்சி வேறு!

இக்காலத்துப் பெண்கள் அதற்கு ஈடுகொடுக்கின்றனர். இதுவும் வரவேற்கத்தக்கதே. ஆக, நாட்டிற்கு நல்ல செய்தி. ஆனால் வீட்டிற்கு எவ்வளவு தூரம் நல்ல செய்தியாக உள்ளது?

அந்தக் காலத்தில் பெண்களுக்கு திருமணம் செய்தால் மறுவருடம் பேரனா? பேத்தியா? என்று கேட்டனர். ஆனால் இன்றோ இந்த வருடம் திருமணம்; மறுவருடம் பேரன்/பேத்தி அல்லது விவாகரத்தா? என்ற நிலை. இது எவ்வளவு ஒரு வேதனையான விஷயம்.
ஒரு குழந்தையை மேல்படிப்புப் படிக்கவைத்து பட்டதாரியாக்குவதற்கு பெற்றோர் கொஞ்சமா சிரமப்படுகின்றனர்? காலையில் ஒரு வகுப்பு, மாலையில் இரண்டு வகுப்பு: வார இறுதியில் நண்பர்கள் வீட்டிற்கு Project Work செய்வதற்கு அழைத்துச் செல்ல வேண்டும்; அசுர வளர்ச்சி அடையும் கணினியில் நம் குழந்தையின் கவனத்தை ஈர்த்தது எது என்று தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

3 வயது வரை குழந்தைக்கு ஊட்டிவளர்த்தால் அது நியாயம். ஆனால் இன்றோ, குழந்தை பெற்றெடுக்கும் காலம் வரை நாம் நம் குழந்தை சாப்பிட்டுவிட்டார்களா? அல்லது பாடப்புத்தகத்தில் புதைந்துவிட்டார்களா? என்று பார்க்க வேண்டிய நிலை. இதோடு நின்றுவிட்டதா? வைரம், வெள்ளி, தங்கம் என்று அனைத்து உலோகங்களும் குழந்தைகளின் திருமணத்திற்கு சேர்த்தாக வேண்டும்.

இப்படி நாம் ஆளாக்கும் பெண்குழந்தைகள் நாட்டிற்கு ஏற்ற சூழலில் இருப்பதுபோல வீட்டிற்கும் ஏற்ற குத்துவிளக்காக வளர்க்க நாம் அவசியம் முற்பட வேண்டும்.

பெண்கள் கட்டிசமத்திகள். கட்டிசமத்திகள் பெற்ற கட்டித் தங்கங்கள் என்றும் கட்டித்தங்கங்களாக மாசு குறையாமல் வாழ என் பார்வையில் இதோ சில யோசனைகள்:

  • தமிழர் என்ற அடிப்படைப் பண்புகளை குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். தமிழ்ச் சமுதாயத்தின் பெருமைகளைக் கூறும்பொழுது, நம் சமுதாயத்தின் மீது அவர்களுக்கு வெறுப்பு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
  • நாம் ஏன் எளிமையான வாழ்க்கை வாழ்கிறோம்; ஏன் சிக்கனமாக இருக்கிறோம் என்ற காரணத்தை குழந்தைகளுக்கு விளக்குங்கள். நம் சமுதாயம் கஞ்சம்; ஆடம்பர வாழ்க்கை வாழத் தெரியாதவர்கள் என்ற எண்ணத்தைக் குழந்தைகளிடம் போக்குங்கள். எளிமை யாகவும் சிக்கனமாகவும் வாழவேண்டிய அவசியத்தை விளக்குங்கள்.
  • வெளிநாடுகளுக்கு செல்வதற்கு நாம் காட்டும் ஆர்வத்தை, ஒருபொழுதும் நம் சமுதாய நிகழ்ச்சி,விசேடம், கோவிலுக்குக் கூட்டிச்செல்ல நினைப்பதே இல்லை. இப்பொழுது இணையதளத்தில் தட்டினாலே போதும். நம் கலாசாரம்,கோவில் வரலாறுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம். கோவில்கள், நம் கலாசாரம் போன்றவற்றைப் பற்றி குழந்தைகளுக்கு விளக்குங்கள்.
  • Burger, Pizza, பன்னீர், மஷ்ரூம், விதவிதமான ரொட்டி வகைகள், இவற்றைக் கற்றுக்கொடுக்க விழையும் நாம் ஏன் நம் தமிழ் உணவுகளையும் செய்ய கற்றுக்கொடுக்கக் கூடாது. ஆக, பெண் குழந்தைகளுக்கு அவசியம் நம் பலகாரங்கள் செய்யக் கற்றுக்கொடுங்கள். நம் பலகாரம்/சாப்பாடு உலகப் பிரசித்திப்பெற்றது என்று அதன் மகத்துவத்தை எடுத்துக்கூறி, நம் பலகாரம்/சாப்பாடு செய்ய வலியுறுத்துங்கள்.
  • Facebook என்ற வலையத்தளம் இன்று மிகவும் பிரபலம். ஆனால் இன்று நம் தமிழ்ப் பெண்கள் Modem என்ற பெயரில் அணியும் உடைகளும், புகைப்படங்களும் வரவேற்கத்தக்க முறையில் இல்லை. Facebook-கிற்காக அப்படி ஏதாவது ஒரு புகைப்படம் பரவாயில்லை. ஆனால் அன்றாட வாழ்க்கையில் பாவாடை, தாவணிக்கு முக்கியத்துவம் கொடுக்கச் செய்யுங்கள். அடக்கமும், மரியாதையும் தானாக வந்து சேரும்.
  • இப்பொழுது காலையில் சாணி தெளிப்பதும், விதவிதமாகக் கோலம் போடுவதும் குறைந்து வருகிறது. Tuition Class என்று எப்பொழுதும் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு ஓடாமல், நல்ல நாள், பெரிய நாளின்பொழுது, நம் வீட்டுக் கோலம் போடுவதற்கு அவசியம் பெண்குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள். பூ கட்டும் பழக்கமும் குழந்தைகளிடம் இப்பொழுது குறைவு. பூ கட்டவும் அவசியம் கற்றுக் கொடுங்கள்.
  • நம் சொந்த ஊரில் வீடு ரொம்பப் பெருசு; வேலைக்கு ஆளே கிடைக்கவில்லை. என் மாமியார், கொழுந்தனார் வீட்டோடு போய் இருப்பதெல்லாம் சிரமம்; யார் வீட்டைக் கூட்டி சுத்தம் செய்வது? இப்படிப்பட்ட பேச்சுகளை இன்றோடு மூட்டைகட்டி விடுங்கள். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. விடுமுறை நாட்களில் ஒரு மாதம் சொந்த ஊரில் கூட்டுக் குடும்பமாகப் போய் குழந்தைகளுடன் தங்குங்கள். அப்படி பெரிய வீட்டில் இருக்கும்பொழுது, நம்மைத் தேடிவருபவர்கள், அவர்களைத் தேடிவருபவர்கள் என்று பலர் வருவர். ஆக, பலதரப்பட்டவர்களின் அறிமுகம் குழந்தைக்குக் கிடைக்கும். நாம் நினைத்தபொழுது சாப்பிட்டாலோ, நாம் நினைத்தபொழுது தூங்கினாலோ, யாராவது ஏதாவது சொல்வார்கள். இதை நாம் செய்யக் கூடாது. இதை நாம் இப்படித்தான் செய்யவேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி குழந்தைகளிடம் ஏற்படும். மேலும், அவர்கள் நினைத்ததை முடிக்காமல், அனைவருடனும் பொறுமையாக, விட்டுக்கொடுக்கும் பழக்கமும் வளரும்.
  • கலை ஆர்வம் உள்ள குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பும் கலைகளைக் கற்றுக்கொடுங்கள். அவர்களுக்கு தன்னம்பிக்கை, கடவுள் சிந்தனை, ஒருநிலையான மனம் ஏற்பட இதன் வழி சாத்தியம்.
  • மாதத்தில் ஒரு வார இறுதியை தாத்தா/பாட்டியுடன் இருக்கச் செய்யுங்கள். தொலைக்காட்சி, தொலைபேசி, கணினி இவற்றிற்கு அந்த வாரம் விடுமுறை கொடுத்து விடச்செய்யுங்கள். தாத்தா/பாட்டி என்ன சொல்கிறார்களோ, அதன்படி அந்த இரு நாட்களும் குழந்தைகளை இருக்கச் சொல்லுங்கள். Bore, இதெல்லாம் எதுக்கு? என்ற கேள்விகளுக்கு அங்கு இடம் வேண்டாம். அப்படி இருக்கும்பொழுது வேகத்தோடு விவேகமாக இருக்க குழந்தைகள் கற்றுக்கொள்வர். மற்றவர்கள் செய்யும் சமையல், வேற்று மொழி, புதிதாக வரக்கூடிய தொழில்நுட்பம் இவற்றையெல்லாம் எளிதாகக் கற்றுக்கொள்ளும் நமக்கு, நம்முடைய பாரம்பரியத்தில் வளர்வதும், பின்பற்றுவதும் கடினம் அல்ல. அப்படி பின்பற்றும்பொழுது அவற்றை நம் வாழ்வில் அன்றாடம் ஒரு பகுதியாக்கும்பொழுது, ஒருபொழுதும் நாம் வழிதவறிச் செல்ல மாட்டோம்.

'அவன் அசையாமல் அணுவும் அசையாது' - கடவுள் மீது நம்பிக்கை - தன்னம்பிக்கை. மனிதனின் உழைப்பும், கடவுள் நம்பிக்கையும் ஒன்றுசேரும்போது, மனிதன் வெற்றியடைகிறான். கடவுள் கையை நீட்டி அழைக்கிறார். அதைப் பிடித்துக்கொண்டு ஏறுவது மனிதனின் கடமை. அவர் கையைப் பிடித்துக்கொண்டு ஏறுபவர்களை உயர்ந்த இடத்துக்கு அழைத்துச் செல்கிறார். ஏற மறுப்பவர்களை இருக்கும் இடத்திலேயே விட்டுவிடுகிறார்....

'எந்த ஒரு மனிதன் மற்றவர்களையும் மனிதர்களாக நினைக்கின்றானோ அவனே மனிதன்.' குறையும் நிறையும் கலந்தவர்களே மனிதர்கள். மனிதர்களைக் குறைநிறையோடு ஏற்றுக்கொள்ளக் காற்றுக் கொள்ளுங்கள். 'நிறையப் புத்தகங்களை வாசியுங்கள் - மனிதர்களை அல்ல. மற்றவர்களின் கருத்துக்களுக்கும், எண்ணங்களுக்கும் மதிப்புக் கொடுங்கள்.

பணம் வாழ்க்கைக்குத் தேவை. வாழ்க்கையே பணம் அல்ல. மனிதனின் பணத்தைப் பார்க்காது மனத்தைப் பாருங்கள். பணம் மட்டும் ஒரு மனிதனின் வெற்றியை நிர்ணயிக்கும் அளவுகோல் அல்ல. பணத்தை ஈட்டும் வேளையில் பாசத்தை விலைபேசி விடாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

சிரிப்பு ஒரு பெண்ணுக்கு அவசியம் புன்னகை. பொன்னகை அல்ல. மனிதனின் முகத்தில் ஒரு முக்கியமான அணிகலன் புன்னகை. விலைமதிக்க முடியாத புன்னகை - விலையே இல்லாமல் கிடைக்கக் கூடியது. சுழன்று ஓடிக்கொண்டிருக்கும் உலகத்தில் அடுத்தவரை நேசிக்கிறோம் என்று வலிமையாக, ஆனால் எளிமையாகச் சுட்டிக் காண்பிக்கக் கூடியது 'புன்னகையே!'

வாழ்க்கை வாழ்க்கை வாழ்பவர்களுக்கே. மாற்றம் இல்லாத வாழ்க்கை வாழ்க்கை அல்ல! கரடுமுரடான பாதையைத் தாண்டிப் பல திருப்பங்களைச் சந்தித்து நாம் எங்குச் செல்ல நினைக்கிறோமோ, அங்கே நம் வாழ்க்கை நம்மை இட்டுச் செல்கிறது. நம் எண்ணம்போல் நம் வாழ்க்கை அமைகிறது. சுற்றும் வரை பூமி, போராடும் வரை மனிதன், வாழும் வரை வாழ்க்கை.

வெற்றி வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று வெறி உடையவர்களுக்கே வெற்றி வந்து சேர்கிறது. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். தன்னம்பிக்கையோடு முயன்றால், வெற்றி நிச்சயம்! ஒருவனுடைய வெற்றியும், தோல்வியும் அவனுடைய முயற்சியாலேயே, அடுத்தவர்கள் எவ்விதத்திலும் காரணம் அல்ல. தேவையானவற்றுக்கு மீண்டும் மனக்கதவைத் திறந்து நேர்வழி சென்றால், அது வெற்றிநடையே!

தோல்வி தோல்வியே வெற்றிக்கு முதல்படி! வாழ்க்கையில் தவறி விழுவது வாழ்க்கையில் ஒரு விளைவே தவிர அது முடிவு அல்ல. தோல்விக்குப்பின் உதிக்கும் ஒரு சிந்தனை, வெற்றியை அள்ளித் தெளிக்கவல்லது. வாழ்க்கையில் தவறி விழவே கூடாது என்பதல்ல. விழும்போதெல்லாம் எழுந்து வெற்றிநடை போட வேண்டும் என்பதை நம் மனதில்கொள்ள வேண்டும்.

பயம் பயம் என்பதே ஒரு பேய். பயம் நம் தன்னம்பிக்கையை அழித்துவிடும். பயம் என்ற பேய் நம்மை பிடித்துக்கொண்டால் நாம் ஒரு நடைப்பிணம். நாம் தெளிவாக இருந்தால், பயம் நம்மை அணுகாது.

நம் வாழ்க்கையில் எதை நோக்கி நாம் ஓடிக்கொண்டு இருக்கிறோம்? பணம், வசதியான வாழ்க்கை - இவற்றிற்காகவா? அல்லது மனநிம்மதிக்காகவா? இப்படி ஒரு கேள்விக்கு பதில் கிடைப்பது மிகக் கடினம். பணமும் வேண்டும், மனநிம்மதியும் வேண்டும். பணம் சம்பாதிக்கவும், மனநிம்மதியைத் தேடியும் சரியான பாதை எது என்று தீர யோசித்து, நம்மை நாமே பல சோதனைக்குள் உள்ளாக்கி ஒரு பாதையைக் கண்டுபிடித்து அதில் பயணிக்கிறோம். சரியாக வகுக்கப்பட்ட பாதையில் நடக்கும்பொழுது, ஒரு கட்டத்தில் பணம் சம்பாதித்துவிட முடிகிறது. அதைத் தொடர்ந்து வரும் வசதியான வாழ்க்கையும் பெற்றுவிட முடிகிறது. அப்படி இருக்கும்பொழுது மனநிம்மதி தானாக வந்துவிட வேண்டும்அல்லவா? ஆனால் 'I am very happy', எனக்கு என்ன குறை என்று யாராலும் சொல்ல முடியவில்லை. 'குறையொன்றும் இல்லை. மறைமூர்த்தி கண்ணா' என்று சொல்லுமளவுக்கு சகல சௌகரியங்களும் - அதாவது அனைத்தையும் பெற்று மனநிம்மதியோடு வாழ்வது ஒரு சிலருக்கு மட்டுமே முடியும்.

வாழ்க்கையில் ஏற்றம் - இறக்கம்; இன்பம் - துன்பம் இவை இரண்டறக் கலந்து இருப்பதுதான் இயற்கை. இருப்பினும் எல்லாரையும்போல ஒரே மாதிரியான வாழ்க்கை வாழும் சராசரி மனிதனாக இருப்பதற்கு பதில் அனைவரது மனதையும் கவரும் ஒரு அற்புத மனிதராக வாழ்ந்தால் எப்படி இருக்கும்? பணத்தால் வரும் சந்தோஷத்தைவிட, அடுத்தவர் மனதைக் கவர்ந்து பிறரின் அன்பிற்கு நாம் பாத்திரமாகும்பொழுது கிடைக்கும் மனநிம்மதி மிகப் பெரிது. அப்படி ஒரு மனநிம்மதியைத் தேட இதோ சில யோசனைகள்:

  • ஒருவரோடு உரையாடும்பொழுது, அவரது பெயரை அடிக்கடி உபயோகியுங்கள். உங்களுக்கு மூத்தவர்கள் என்றால் 'என்ன அம்மா, என்ன அண்ணன், ஐயா' என்று சொல்லுங்கள். இளையவர்களானால், அவரது பெயரை ஒரு வாக்கியத்தை முடிக்கும்பொழுதும், ஆரம்பிக்கும்பொழுதும் சொல்ல முற்படுங்கள். ஒருவருக்கு அவரின் பெயர் மிகவும் இனிமையான ஒன்று.

  • அடுத்தவர்களோடு பேசும்பொழுது, அவர்கள் சம்பந்தமான ஏதாவது இரண்டு, மூன்று கேள்விகளைக் கேளுங்கள். 'எப்படி இருக்கிறீர்கள்?' என்று கேட்பதோடு நிறுத்திவிடாமல், 'அப்புறம் என்ன விசேஷம்? இப்ப என்ன பண்ணிட்டு இருக்கீங்க?' என்று சில கேள்விகளைக் கேளுங்கள்.
  • மற்றவர்கள் அவர்களைப் பற்றி உங்களிடம் ஏதாவது சொல்ல வந்தால், அது உங்களுக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் கூட, ஒரிரு நிமிடங்கள் காதைத் திறந்து அவர்கள் சொல்வதைத் தலையை அசைத்துக் கேளுங்கள். அவர்களுக்கு அது நீங்கள் ஆதரவாக இருப்பதைச் சுட்டிக்காட்டும்.

  • ஒருவரது கருத்தை மதியுங்கள். உங்களுக்கு அந்தக் கருத்து வேறுபட்டாலும், உங்கள் கருத்து உங்களுடையது, அவர்கள் கருத்து அவர்களுடையது என்ற மனப்பாங்கில் செயல்படுங்கள்.
  • சிலர் சொல்வது உங்களுக்குத் தவறு என்று பட்டாலும், அவரது முகத்திற்கு எதிரே அதைச் சொல்லாதீர்கள். நேரம் பார்த்து அமைதியாக நீங்கள் அதைத் தவறாகப் பார்ப்பதன் காரணத்தை விளக்குங்கள்.
  • உங்களுடைய தவறை உடனே ஒப்புக்கொள்ளுங்கள். 'அது அப்படியா? நான் அதை தவறாக புரிந்துகொண்டு விட்டேன்' என்று சொல்லுங்கள். மாற்றுக் கருத்துக்கு அப்பொழுது வேலையே இல்லாமல்போகும்.
  • பொன்னகையைவிட புன்னகையே சிறந்தது. எப்பொழுதுமே சிரித்த முகத்தோடு ஒருவருடன் பேசுங்கள். நான் உன்மீது அன்போடு இருக்கிறேன் என்று அவர்களுக்கு அந்தப் புன்னகை சொல்லும்.
அடுத்தவர் மனதைக் கவர்வது கடினமல்ல, எளிதே. அடுத்தவரின் அன்பிற்குப்பாத்திரமாகுங்கள் மனநிம்மதி உங்களைத் தேடிவரும்.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது நாம் அறிந்ததே. இருப்பினும் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும், சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பெறும் திருமணங்கள், இருமனம், ஒருமனமாகாமல் பாதியிலேயே முடிவடைந்து விடுகிறது. "தாலி பெருகிவிட்டதே ' என்பர் நம் பெண்கள். ஆனால் இளம்பெண்கள் இன்று சின்ன சின்ன கஷ்டங்களைக்கூட தாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். கட்டிய தாலிக்கு அர்த்தம் என்ன? என்கிறார்கள். திருமணமாகப்போகும் இளம் பெண்கள் சிலவற்றை தெளிவாக தங்கள் மனங்களில் பதித்துக்கொண்டால், திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் உண்மையை உணர்வர். இதோ அதற்கான சில யோசனைகள்:

  • நமக்குக் கிடைத்த கணவன், நாம் வாழவந்த குடும்பம் சரியில்லை என்று சொல்வதைத் தவிர்த்து, நாம் அங்கு சரியான மனைவியாக /மருமகளாக நடந்து கொள்கிறோமா? என்பதை சிந்தியுங்கள். நமக்கு எதுவுமே சரியாக அமையவில்லை என்று சொல்வதைவிட, நமக்குக் கிடைத்தை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது எப்படி என்று பார்த்து, சரிசெய்து கொண்டால், மனநிம்மதியைத் தேடமுடியும்.
  • நமக்கு அவர்களிடமிருந்து என்ன கிடைக்கிறது என்று பார்க்கும்பொழுது, நமக்கு இருப்பதற்கு ஒரு இடமாக நாம் வாழவந்த குடும்பம் அமைகிறது. ஆனால் நாம் அவர்களுக்கு எதையும் எதிர்பார்க்காமல் கொடுக்கும் பொழுது, நாம் ஒரு திருப்திகரமான ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடிகிறது.

  • உங்கள் தாய் வீட்டில் இருந்த சௌகரியத்தை, அப்பொழுது தான் சம்பாதிக்கத் தொடங்கியிருக்கும் உங்கள் கணவனிடம் எதிர்பார்க்காதீர்கள். உங்கள் தந்தையார் பல ஆண்டுகளாக உழைத்துச் சேகரித்த செல்வத்தையும், சௌகரியத்தையும் திருமணம் ஆன கையோடு உங்கள் கணவனிடம் எதிர்பார்த்தால், உங்கள் மனநிம்மதி குறையுமே தவிர, கூட வழியில்லை.
  • மனிதர்கள் குறைகள் மற்றும் நிறைகள் நிறைந்தவர்கள் தான் என்று தெளிவாக இருங்கள். உங்கள் கணவனிடமும் நிச்சயம் குறை இருக்கும் என்று உங்கள் மனதை தயார்செய்யுங்கள். குறைகளே ஒருவரிடம் இல்லை என்றால், அவர் மனிதன் அல்ல; கடவுள். கடவுளை ஒருபொழுதும் நாம் திருமணம் செய்துகொள்ள முடியாது. மனிதனைத் தான் திருமணம் செய்தாக வேண்டும்.

  • உங்கள் பெற்றோர் வீட்டில் நீங்கள் இருந்த வாழ்க்கை முதல் அத்தியாயம். உங்களது திருமண வாழ்க்கை மறு அத்தியாயம். ஆக, முதல் அத்தியாயத்தையும்,மறு அத்தியாயத்தையும் ஒப்பிடுவதும் தவறு; முடிந்த முதல் அத்தியாயத்தை இரண்டாம் அத்தியாயத்தில் மறுபதிப்புச் செய்யத் துடிப்பதும் தவறு.
  • பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் உள்ள அதிருப்தியை இரண்டு பக்கமும் சொல்வதைத் தவிர்த்து விடுங்கள்.
  • நிச்சயமாக, மற்றவரை சந்தோஷப்படுத்தாமல், ஒருபொழுதும் நீங்கள் சந்தோஷமாக இருக்க முடியாது என்பதை மறுக்காமல் ஒப்புக்கொள்ளுங்கள். ஆக, "தாலி பெருகிவிட்டதே' என்று கூறும் சமுதாயத்தில் - இனி சந்தோஷமும் பெருகும்.

'பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க.' இவை தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகமான, பழக்கப்பட்ட மிகவும் விருப்பமான சொற்றொடர். பதினாறு பேறுகளைப் பெற்று ஒருவர் வாழ்ந்தால் தான் அவர்கள் நிறைவான வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்பது தமிழர்களின் பொதுவான நம்பிக்கை. அழகு, அன்பு, பொறுமை, அடக்கம், கல்விச்செல்வம், சந்தான செல்வம் என வாழ்க்கையின் பல அம்சங்களை உள்ளடக்கியது இந்தப் பதினாறு பேறு.

என்னைப் பொறுத்தவரை ஒருவருக்குக் கிடைக்கப்பெறும் செல்வங்களுள் சந்தான செல்வம் - அதாவது குழந்தைச் செல்வமே தலையாய செல்வம்; கிடைப்பதற்கரிய செல்வம். அந்தக் காலத்தில் ஒரு தம்பதியினர் பத்துக் குழந்தைகளை பெற்றுக் கொள்வது மிகவும் சாதாரணம்.

ஆலமரம் போல குடும்பங்கள் தழைத்துவளர்ந்தன. ஒருவருக்கு அத்தை, பெரியம்மா, பெரியப்பா, சின்னம்மா, சித்தப்பா, மாமா என்று சொல்லிக்கொள்ள அத்தனை சொந்தங்களும் இருந்தன.

ஆனால் இன்று ஒருவருக்கு பத்துக் குழந்தைகள் என்றால் 40 வயதை ஒட்டிய தம்பதியினருக்கு பத்தாவது குழந்தை பிறந்திருக்கிறது என்று சொன்னால், அதுதான் அடுத்த நாள் அனைத்து பத்திரிகைகளின் தலைப்புச் செய்தியாக இருக்கும்! விஞ்ஞான வளர்ச்சி உலகத்தை மட்டும் சுருக்கிவிடவில்லை. குடும்பங்களையும் சேர்த்துத்தான் சுருக்கிவிட்டிருக்கிறது. ஒரு குடும்பத்திற்கு தற்பொழுது சராசரியாக இரண்டு குழந்தைகள் தான்! ஆக, தற்பொழுது ஒருவருக்கு தன் சொந்த சித்தி, மாமா, பெரியம்மா, அத்தை என்று ஒருவரை மட்டுமே குறிப்பிட முடிகிறது. மற்ற உறவுமுறைகள் எல்லாம், தூரத்து உறவுகளோ அல்லது - ஒன்றுவிட்ட உறவுகளோதான்.

அந்தக் காலத்தில் சொந்தங்கள் அனைத்தும் ஒரே வீட்டில் * கூட்டுக் குடும்பமாகவோ அல்லது கூப்பிடும் தூரத்திலோ வசித்து வந்தனர். ஆக, குடும்பங்கள் அடிக்கடி ஒன்றுகூடி மகிழ்ந்தன. ஒரு பக்கத்துக் கடைக்கு செல்ல வேண்டுமானால் கூட ஒன்றாக குழந்தைகளை சேர்த்து, கைகோர்த்து கடைக்குச் செல்வர். கடலைமிட்டாய் வாங்கினால்கூட அதை 'காக்கா கடி கடித்து கொடுத்து கடலைமிட்டாயை மட்டுமல்லாது, தன் அன்பையும் -பங்கிட்டுக் கொள்வர்.

பெரிய வீடுகளில் அனைத்துக் குழந்தைகளுக்கும் சேர்த்து அடுக்களையில் பெரியவர்கள் சோறு பொங்கும்பொழுது, இங்குகுழந்தைகள் ஒன்றுசேர்ந்து

'கூட்டாஞ்சோறு' பொங்கி, பகிர்ந்து உண்ண வேண்டும் எனும் பழக்கத்தை கற்றுக்கொள்வர். நான், என் தம்பி, என் அக்கா எனும் சுயநலத்தை விடுத்து அனைவருடனும் ஒன்றுகூடி பெருந்தன்மையோடும், விட்டுக் கொடுக்கும் பழக்கத்தையும் கற்றுக்கொள்வர்; பத்துப்பேர் கூடி விளையாடும்பொழுது, ஒருவருக்கு ஒன்று கிடைக்கும். மற்றவருக்கு அது கிடைக்காமல் போகலாம். சரிதான் என்று தன் மனதை தானே சமாதானம் செய்துகொள்ளும் இயல்பும் வருவது இயற்கை.

இப்படி குழந்தைகள் தாமாகவே பல குழந்தைகளுடன் சேர்ந்து அரிய பல பண்புகளை கற்றுக்கொண்டனர். இன்று நகரங்களில் திரும்பிய இடமெல்லாம் தென்படும் 'Self Development Courses' போன்ற வகுப்புகளுக்கு அன்று தேவையில்லாமல் இருந்தது.

கூட்டுக் குடும்பங்கள் மாறி இன்று தனிக்குடித்தனம். குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை எப்படி சுருங்கி விட்டதோ அதேபோல குழந்தைகளின் பழக்க வழக்கங்களும் சுருங்கி விடுகின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் இயற்கையே.காலத்திற்கு ஏற்ப ஒருவர் தம்மை தயார்ப்படுத்திக் கொள்வது மிக அவசியம்.

ஆக, அந்தக்காலம்போல இப்பொழுதும் கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்துதான் நற்பண்புகளை கற்றுகொள்ள வேண்டும் என்பது கிடையாது. அது சாத்தியமும் இல்லை. அந்தக் காலத்தில் பெண்கள் அதிகம் வேலைக்குச் செல்லவில்லை. இன்று பெரும்பாலானபெண்கள் வேலைக்குச் செல்கின்றனர். குழந்தைகள் அனைத்தையும் கற்று திறமையானவர்களாக வாழவேண்டும்; நற்பண்புகள் நிறைந்த சிறந்த குடிமகனாக திகழவேண்டும் என்பதில் இந்தக் காலத்து பெற்றோர் முனைப்போடு செயல்படுகின்றனர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

கணினிமயமாகி வரும் இந்தக் காலகட்டத்தில் பெண்கள் வேலைக்குச் சென்று பொருள் ஈட்டி, குடும்பத்தையும் நிர்வகிக்கும் பெரிய பொறுப்பை வகிக்கின்றனர். விமானப் போக்குவரத்து பயணிக்கும் நேரத்தை சுருக்கி குடும்பங்களை வெவ்வேறு நாடுகளில் இன்று குடியமர்த்தியுள்ளது. யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று மக்கள் தங்கள் குடும்பங்களுடன் பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். பெரியோர்களுடன் குழந்தைகள் சேர்ந்து வளர்வதும் குறைந்து வருகிறது. ஒரு பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குப் பெரியவர்களாக, பெற்றோர்களாக, நண்பர்களாக அனைத்துமாகி அவர்களிடம் நற்பண்புகளை புகட்ட வேண்டிய சூழல் இன்று நிலவுகிறது.

குழந்தைகள் உறவுக்காரர்களுடன் சேர்ந்து நாளுக்கு நாள் தாமாக கற்றுக்கொண்டவற்றை பெற்றோர்கள் கண்ணும் கருத்துமாக இன்று குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. விஞ்ஞானம் அதிகம் வளர்ச்சியடைந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் குழந்தைகள் அதிகம் சிந்திக்கும் திறன் பெற்றுள்ளனர்.

பெற்றோர்களுக்கு அறிமுகம் இல்லாத, தெரியாதவற்றைக் கூட குழந்தைகள் அறிந்து வைத்திருக்கும் சூழல் இன்று நிலவுகிறது. அடித்துத் திருத்தாமல் அணைத்துத் திருத்தினால் மட்டுமே பெற்றோர், நல்ல நண்பர்களாக இருக்கமுடியும். குழந்தைகளைத் தன் வழியில் கொண்டுவர முடியும். 'நான் சொல்வதைத்தான் நீ கேட்க வேண்டும்' என்கிற அதிகாரப் பேச்சுகள் மலையேறிவிட்டன.

வேலைக்குச் செல்லும் பெற்றோருக்கு தற்பொழுது குழந்தைகளுடன் செலவிடும் நேரமும் மிகக் குறைவு. ஆக, இன்றைய பெற்றோர் ஒவ்வொன்றையும் மிகவும் கவனமாகவும், ஆற்றலுடனும் செய்து குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட வேண்டிய கட்டாயம் உள்ளது. வேகமாக வளரும் இந்த உலகத்தில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குச் செய்பவற்றை பழமையுடன் புதுமையாகச் செய்வது இன்றியமையாதது.

'இன்றைய சூழலில் பெற்றோர் குழந்தைகளுடன் நேரத்தை எப்படிச் செலவிட வேண்டும்? புதுமையாக ஒவ்வொன்றையும் செய்து அவர்களை நல்வழிப்படுத்தும் முறையை எப்படிப் பின்பற்ற வேண்டும்' என்பவற்றைப் பற்றிப் பார்ப்போம். பழமையுடன் புதுமையையும் குழந்தைகளிடம் கொண்டுசெல்ல வருகிற சில கட்டுரைகள் பதில் சொல்லும்.

ஒரு குழந்தை எவ்வாறு தம் மொழியைத் தானே கற்றுக் கொள்கிறதோ, தன் தாயை எப்படி அடையாளம் கண்டு கொள்கிறதோ, அதைப்போல தன் பெற்றோர் என்ன செய்கின்றார்களோ, அதை மிகவும் இயற்கையாகவே உள்வாங்கிக் கொள்கின்றனர். குழந்தையின் வளர்ச்சியில் மிகவும் முக்கியப் பங்கு வகிப்பது, குடும்பம், பள்ளி மற்றும் சமுதாயம். 'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்பது ஒரு பிரபலமான பழமொழி. ஐந்து வயதிற்குள் மனதில் படிவது மிக எளிதாக, பச்சைமர ஆணி போல் குழந்தைகள் மனதில் படிந்துவிடுகிறது.

ஆக, பெற்றோரைப் பார்த்து குழந்தை கற்றுக்கொள்வது முதல்படி. நம்மையறியாமலே நாம் செய்பவற்றை குழந்தை கற்றுக்கொள்வதை நாம் ஒருபோதும் அறிவதில்லை. நாம் பலவருடம், பல சந்தர்ப்பங்களில் கற்றுக்கொண்டவற்றை எதுவுமே அறியாத குழந்தையிடம் உடனேயே எதிர்பார்ப்பது, பெற்றோர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு. நாம் சொல்லிக்கொடுத்த உடனேயே குழந்தை கற்றுக்கொண்டுவிட வேண்டும் என்று நினைப்பது நம்முடைய அறியாமை.

அது என்னவென்றே தெரியாத குழந்தை நாம் புதிதாக ஒன்றை சொல்லிக்கொடுக்க நினைக்கும்பொழுது, அதை ஆர்வத்தோடு கற்றுக்கொள்ள முயல்கிறது. அதில் என்ன இருக்கிறது என்று ஆவலாக யோசிக்கின்றது. சொன்னவுடனேயே, குழந்தை கற்றுக்கொள்ளாவிட்டால், நாம் ஆத்திரம் அடைந்து குழந்தைகளை அடித்துவிடுகிறோம்.

அப்படி நடக்கும்பொழுது நாம் கற்றுகொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் குறைந்து, ஒருவிதமான பயம் உண்டாகிறது. நாம் சமாதானமாகி மீண்டும் கற்றுக்கொடுக்க முயலும்பொழுது, குழந்தை முறுக்கிக்கொண்டு மீண்டும் நம்மிடம் கற்றுக்கொள்ள மறுக்கிறது. நம்மீது ஒருவித வெறுப்பு மட்டும் ஏற்படாது, அது என்ன என்று நம்மால் கற்றுக்கொள்ள முடியவில்லையே என்கிற ஏமாற்றமும் குழந்தைகளிடம் உண்டாகிறது. எனவே, பெற்றோர் குழந்தையின் ஆர்வத்தை அறிந்து, அவர்கள் கற்றுக்கொண்டு விடுவர் என்று நம்பினால் நமக்கும் அலுப்பில்லை, குழந்தையின் கற்கும் திறமும் ஆர்வமும் மேலும் வளரும்.

ஆக, குழந்தைகளிடம் மிகத் தேவை பொறுமை. குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதும் பெற்றோரின் செயலாலே; தன்மையுடன் அவர்களை வளர்ப்பதும் பெற்றோரின் கைகளிலே. பொதுவாக நான்கு பேருக்கு நடுவில் நம் குழந்தை சொல்லும் கதையையோ, பாட்டையோ, 'என் பொண்ணு ரொம்ப நல்லாபாடுவா தெரியுமா? செல்லம், ஆண்டி, அங்கிளுக்கு பாடிக் காட்டு' என்று சொல்ல, அப்பொழுதுதான் குழந்தை வாயை கையில் வைத்துக்கொண்டு கூனிக்கொண்டு, 'நான் மாட்டேன்... ம்... ஹ்ம்...' என்று அடம்பிடிக்கும்.

எப்படியாவது நம் குழந்தை பாடிக் காண்பித்துவிட வேண்டும்; 'அடடா உங்க குழந்தை பிரமாதமா பாடுறா! ஒரு எதிர்கால பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி உருவாகியாச்சு!' என்று அவர்கள் சொல்ல,நாம் அதைக் கேட்டுவிட வேண்டும் என்று பெற்றோர் ஒரு கணக்குப் போட, அங்கு நடப்பதோ வேறு.

நம் குழந்தைக்குக் கொடுக்கும் மரியாதையைவிட நம் சந்தோஷத்திற்கும், நான்கு பேருக்கு நடுவே நம் கௌரவத்திற்கும் நாம் கொடுக்கும் மதிப்பே, உண்மையில் சொல்ல வேண்டுமானால், அதிகம். வந்தவர்கள் சென்றவுடன் ஏதோ நடந்துவிடக்கூடாத ஒன்று நடந்துவிட்டது போல நாம் நம் தலையெழுத்தை நினைத்து, அலுத்துக்கொண்டு நொந்து நூலாகி குழந்தையை திட்டும்பொழுது பாதிக்கப்படுவது நம் குழந்தையின் தன்னம்பிக்கை! இப்படிச் செய்யும்பொழுது குழந்தை நாம் ஏதோ குற்றம் செய்துவிட்டதைப் போல் உணரலாம்.

ஆக, யாராவது வீட்டிற்கு வந்தால், அவர்களைப் பார்த்துப் பேசவேண்டும் என்ற ஆவல் குறைந்து, தன் அறைக்குள்ளேயே அடைந்துகொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம். எனவே, குழந்தையின் மனதைப் புரிந்து, எது தேவை, எது தேவையில்லை என்பதை பெற்றோர் உணர்ந்து செயல்பட வேண்டியது இன்றியமையாத ஒன்று.

இதற்கு மாறாக சில பெற்றோர் வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடம் 'என் குழந்தை நாலும் தெரிந்த வல்லவன்' என்ற தொனியில் குழந்தைக்குத் தெரிந்தவற்றைப் பாடவோ, பேசவோ சொல்ல, குழந்தை தன் வயதுக்கு மீறிப் பேசும். அப்பொழுது உள்ளூர ரசித்துக்கொண்டு, சும்மா ஒரு பேச்சுக்கு ஏய் அப்படி யெல்லாம் பேசக்கூடாது என்று செல்லமாக திட்டிவிட்டு விடுவதும்-தவறு.

அடித்துத் திருத்தாமல், குழந்தைகளை அழைத்து அமைதியாகப் பேசினால், கதைகளையோ அல்லது உண்மைச் சம்பவங்களையோ எடுத்துக்கூறி திருத்தினால், அறிவுரை கூறினால், 'இன்றைய குழந்தைகள், நாளைய தலைவர்கள்' என்ற வாக்கியம் உண்மையாகும்.

"விதை விதைத்தவன் விதை அறுப்பான்; தினை விதைத்தவன் தினை அறுப்பான்' என்பது பழமொழி. நாம் எதை விதைக்கிறோமோ அதைத்தானே அறுவடை செய்ய முடியும்? நம் குழந்தைகளிடம் நாம் 'மரியாதை' என்ற அடிப்படையில் சில நற்பண்புகளை விதைத்தால், பிற்காலத்தில் நமக்கு மட்டும் அல்லாது நாட்டிற்கே நல்ல குடிமகன்களாக நாம் அவர்களை உருவாக்கலாம். இந்த நற்பண்புகளை அவர்களிடம் கொண்டு வருவதற்கு நமக்கு அதிக நேரம் பிடிக்காது; அதிகம் செலவாகாது; கடின உழைப்பு தேவைப்படாது; மிகவும் எளிமையானது. இதோ உங்கள் பார்வைக்குச் சில:

  • குழந்தைகளின் அறைக்குள் நாம் செல்லுமுன்னர், நம் குழந்தையின் அறைதானே என்று உள்ளே சட்டென்று நுழையாமல், கதவைத் தட்டி 'கண்ணா அம்மா/அப்பா வரட்டா?' என்று கேளுங்கள். அடுத்தவர்கள் என்ன செய்கிறார்களோ? நாம் அவர்களைத் தொந்தரவு செய்யாமல், நாம் அவர்களை அணுக வேண்டும் என்பதை குழந்தை புரிந்துகொள்ளும்.)

  • உங்கள் குழந்தையின் பேனாவையோ, பென்சிலையோ நீங்கள் எடுத்து உபயோகிக்க நினைத்தால், அவர்களின் அனுமதியைக் கோரிய பின்பே உபயோகியுங்கள். அடுத்தவரது பொருள் அது; அது அவர்களுக்கே சொந்தம்; நம்முடையது மட்டுமே நமக்கு சொந்தம்;என்ற சரியான எண்ணம் குழந்தையிடம் துளிர்விட இது வழிவகுக்கும்.
  • ஒரு பெரியவரை எப்படி மற்றொருவருக்கு அறிமுகம் செய்கிறீர்களோ, அதைப்போலவே இது என் மகன்/மகள், அவர்களின் பெயர், அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்று அறிமுகம் செய்து வையுங்கள். அப்படிச் செய்யும் பொழுது அவர்களே அவர்களை இந்தச் சமுதாயத்தின் ஒரு பகுதியினராகப் பார்ப்பர்.

  • தினமும் காலையில் நாளிதழ் வாசிக்கும்பொழுது, அதில் உள்ள முக்கியமானவற்றை, ஒரு வரியிலோ, சிறு துணுக்காகவோ பகிர்ந்துகொள்ள முனையுங்கள். உட்கார்ந்து அவற்றை அவர்களுடன் பேச நமக்கு நேரமும் இருக்காது, கேட்பதற்கு அவர்களுக்குப் பொறுமையும் இருக்காது.காலையில் குளிப்பாட்டும்பொழுதோ, தலை சீவும்பொழுதோ சுருக்கமாக அவர்களுக்குச் சொன்னால், நாட்டில் நடப்பவற்றை அறிந்துகொள்ள வேண்டும்; தினசரி நாளிதழை நாமும் படிக்க வேண்டும்; தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறக்கும்.
  • வீட்டில் நடப்பவற்றை சிறுகுழந்தைதானே, இந்தப் பிரச்சினையை அவர்களிடம் கூறி, ஒருவித கசப்பை ஏற்படுத்தக் கூடாது என்று ஒருபொழுதும் நினைக்காதீர்கள். அவர்களுக்குப் புரியும்படி நடப்பவற்றை, உள்ளதை கோடிட்டுக் காட்டுங்கள். வாழ்க்கை என்றால் இன்பம், துன்பம் இரண்டுமே கலந்தது; வாழ்க்கைப்பாதை கரடுமுரடானதே எனும் உண்மையை அவர்கள் உணர்ந்து கொள்வர்.

  • அவர்களுடன் நடந்துசெல்லும்பொழுதோ, தூங்குமுன்னரோ ஒரு நாட்டை உருவாக்கிய தலைவரைப் பற்றி, அவர்களின் சாதனைகள், அவர்கள் சந்தித்த சோகங்களை ஒரு ஐந்து நிமிடம் பேசுங்கள். தலைமைத்துவத்தை அவர்களுக்குள் விதைக்க இது ஒரு சிறந்த வழி.
  • குழந்தையின் தவறைச் சுட்டிக் காண்பிக்கும்பொழுது, முதலில் குழந்தை செய்த நல்லதை சொல்லிய பின்னரே தவறைச் சுட்டிக் காண்பியுங்கள். நீ நன்றாகச் செய்தாய். ஆனால் ஏன் இப்படி ஒரு தவறையும் சேர்த்துச் செய்தாய்? நீ செய்த இந்தத் தவறு, ஒரு வெள்ளைத் தாளில் இட்ட கறுப்புப் புள்ளியைப்போல் ஆகிவிட்டதே' என்று அழகாகக் கூறுங்கள். அப்படிச் செய்யும்பொழுது குழந்தைக்கு உங்கள்மீது வெறுப்பும் வராது. உங்களின் அறிவுரை மறுமுறை அந்தத் தவறை குழந்தை செய்யாமல் தடுக்கவும் உதவும்.
Action speaks louder than words. மணிக்கணக்காக பெற்றோர், குழந்தைகளுக்கு செய்யும் உபதேசத்தைவிட மேலே கூறியவற்றை சில மணித்துளிகளில் பரிமாறினால், உங்கள் அருமைக் குழந்தைகளை வீட்டிற்கு மட்டுமல்லாது நாட்டிற்கே நல்ல குடிமகன்களாக உருவாக்க முடியும்.

இன்று குழந்தைகளின் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடும் பழக்கம் நம்மிடையே நிலவுகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் இயற்கையே! ஆனால் வருடா வருடம் ஒரே மாதிரி, கேக் வெட்டி, மிட்டாய் கொடுத்து, கோவிலுக்குச் சென்று கொண்டாடுவதில் என்ன சுவாரஸ்யம்? எதையுமே அர்த்தமுள்ளதாக ஆக்க நாம் ஏன் விழையக் கூடாது?

எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும், அர்த்தமுள்ளதாகவும் உங்கள் குழந்தைகளின் பிறந்தநாளைக் கொண்டாட இதோ சில யோசனைகள்:

  • குழந்தையின் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் வீட்டில் குழந்தையை ஒரு சிறு செடியை நட்டுவைத்து அதை தினமும் தண்ணீர் ஊற்றி பராமரிக்கச் செய்யுங்கள். மரம் வளர்ப்பது ஒரு நாட்டின் வளமைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக் கூறுங்கள்.
  • குழந்தைகளுக்குப் பிறந்தநாள் பரிசு வழங்குவதைவிட, அந்தக் குழந்தை அந்த வருடம் செய்த நல்லது, கெட்டது, அது மாற்றிக்கொள்ள வேண்டிய குணம், நீங்கள் அந்தக் குழந்தையிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் போன்றவற்றை எழுதி ஒரு கடிதமாகக் கொடுங்கள்.
  • ஒவ்வொரு வருடமும் அந்தக் குழந்தையின் புகைப்படத்தை எடுத்து அந்த வருடத்தைப் பட்டியலிட்டு ஒரு புகைப்பட ஆல்பத்தைத் தயார் செய்யுங்கள். பிற்காலத்தில் அவர்களது குழந்தைகள் அதைப் பார்க்கும்பொழுதுகூட சுவாரஸ்யமாக இருக்கும்.

  • அதேபோல, அந்தக் குழந்தையை அது அந்த வருடம் செய்த நல்லது/கெட்டதை, ஒரு கடிதத்தில் எழுதி ஒரு File இல் போட்டுவைக்கச் செய்யுங்கள். அவற்றை ஒவ்வொரு வருடமும் வாசித்து, அவர்களையே தன்முனைப்போடு அந்த தவறைத் திருத்தி நடக்குமாறு கூறுங்கள்.
  • அதேபோல பிறந்தநாளுக்கு வரும் விருந்தினர்களை அந்தக் குழந்தையிடம் அவர்களுக்குப் பிடித்தது/பிடிக்காததை ஓரிரு வரியில் பேசச் சொல்லுங்கள். பொதுவாக பெற்றோர் ஏதாவதுகூறினால் அது குழந்தைகளுக்குப் பிடிக்காது. ஆனால் மற்றவர்கள் கூறும்பொழுது அவர்கள் தயங்காமல் அதை ஏற்றுக்கொள்வர்.
ஆக, ஒவ்வொரு பிறந்தநாளையும், குழந்தை பிறந்தபொழுது இருந்த சந்தோஷம், திருப்தியைவிட அதிக மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.

  • கோவிலுக்குக் கூட்டிச் செல்வதற்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ, அதேபோல ஏழை எளியவர்களுக்கு (ஒரிருவருக்காவது) ஒரு சிறு தொகையை தானம் செய்ய வேண்டும் என்ற பழக்கத்தை உண்டு பண்ணுங்கள்.
  • ஒரு சிறு உண்டியலை அவர்கள் பிறந்தநாளன்று கொடுத்து, அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் சிறு தொகையைக் கொடுத்து, சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். அப்படிச் சேமித்தவற்றை ஒரு வங்கியில் அவர்கள் பெயர்களில் ஒரு கணக்கு திறந்து, அவர்களை அழைத்துச் சென்று போடச்செய்யுங்கள். இப்படிச் செய்து, சேமிக்கும் பழக்கத்தை வளருங்கள்.

தற்பொழுது ஒரு குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள் என்றாகிவிட்டது. பெற்றோர் இருவருக்கும் வேலை, தனிக்குடித்தனம். மிகுதியான நேரத்தில் கணினி, தொலைக்காட்சி, கைத்தொலைபேசியில் வரும் விளையாட்டுகள் இவையே குழந்தைகளின் உற்ற நண்பர்களாகிவிட்ட ஒரு சூழல். இப்படிப்பட்ட சூழலில் குழந்தைகளிடம் எவ்வாறு குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து, பகிர்ந்து, மகிழ்ந்து வாழவேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பது பெற்றோர்களின் இன்றியமையாத கடமையாகிவிட்டது.

பொதுவாக வீட்டிற்கு வருபவர்களை 'வாங்க' என்று சொல்வதற்கும், 'என்ன சாப்பிடுறீங்கன்னு கேள்' என்று கேட்பதற்கும், ஆண்டி, அங்கிள் பார்த்து பதில் சொல்லு என்று குழந்தைகளிடம் சொல்லி அவர்களை பழக்கப்படுத்த பொதுவாகஎந்தப் பெற்றோரும் தவறுவதில்லை. இந்த அடிப்படைப் பண்புகளைத் தாண்டி குழந்தைகளிடம் இளம் வயதிலேயே, அன்பெனும் விதையை பெற்றோர் விதைக்க வேண்டும். அதன் முதல்படியாக கூடப்பிறந்தவர்களுடன் பாசமாக இருக்கவும், வளர்ந்துவரும்பொழுது போட்டி, பொறாமைகளை தவிர்க்கவும், 'பிறக்கும்பொழுது அண்ணன், தம்பி, பத்து வயதில் பங்காளி' என்கிற வாக்கியத்தைப் பொய்யாக்கவும், பெற்றோர்கள் சிலவற்றை எளிமையாகப் பின்பற்றுவது மிக மிக நல்லது.

விட்டுக்கொடுக்கும் பழக்கம், ஒருவரை ஒருவர் மதிக்கும் பழக்கம், பாராட்டும் பழக்கம் இவை நம் கூடப்பிறந்தவர்களிடத்தில் ஒருவருக்கு முதலில் வரவேண்டும். பொதுவாக இரண்டாவது குழந்தை பிறக்கும்பொழுது அதிக சந்தோஷம் அடைவதும், அதேசமயம் அதிக பொறாமைப்படுவதும் முதல் குழந்தையே.

அந்தக் குழந்தையின் சந்தோஷத்தை வளர்த்து தம்பி/தங்கையிடம் ஒரு பிணைப்பை ஏற்படுத்துவதும், அல்லது அந்தக் குழந்தைகளிடம் வளரும் பொறாமையைக் களைய எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் விட்டுவிடுவதும் பெற்றோர்களின் கைகளிலேயேதான் உள்ளது. பின்வரும் இவ்வழிகளை பின்பற்றுவதன் மூலம் நம் குழந்தைகளிடம் ஒரு பிணைப்பை ஏற்படுத்துவதும், அவர்களிடம் ஒருவரையொருவர் மதிக்கும் தன்மையை உண்டுபண்ணுவதும் பெற்றோருக்கு சாத்தியம். இப்படிச் செய்வதன் மூலம் அந்தக் குழந்தைகளிடம் தாம் மூத்த குழந்தை என்பதும், நம் தம்பி தங்கைகளை நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியும் ஏற்படும்.

  • குழந்தை பிறந்து அந்தக் குழந்தையை மருத்துவ மனையிலிருந்து வீட்டிற்கு அழைத்துவரும்பொழுது என் இனிய அக்கா/அண்ணாவிற்கு' என்று ஒரு அழகிய வாழ்த்து அட்டையை எழுதி உன் தம்பி/தங்கை உனக்கு அன்பாக கொடுத்திருக்கிறார்கள் பார் என்று கூறுங்கள். இது இருவரிடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்தும்.
  • வீட்டிற்கு பிறந்த குழந்தையைப் பார்க்க வருபவர்கள், ஏதாவது ஒரு பரிசுப்பொருள் வாங்கிவரும்பொழுது, மூத்த குழந்தைக்கு ஏதாவது ஒரு சிறு பொருளை தயாராக வைத்திருங்கள். இப்படிச் செய்வதால் பிறந்த குழந்தைமீது ஏற்படும் பொறாமை தவிர்க்கப்படும்.

  • மூத்த குழந்தையிடம், பிறந்திருக்கும் குழந்தை என்ன செய்கிறது என்று கவனித்துக் கொள்வது உன் பொறுப்பு என்று சொல்லுங்கள். கண்ணா, குழந்தை தூங்கிருச்சா? அழுகுதா? அழுகாதே சொல்லு, சாப்பிடச் சொல்லு கண்ணா, நீ சொன்னாதான் கேட்கும் என்று கூறுங்கள். இப்படிச் செய்வதன் மூலம் மூத்த குழந்தையிடம் ஒரு பொறுப்புணர்ச்சி ஏற்படும்.
  • இரண்டாவது குழந்தை பிறந்தவுடன், வேலைப்பளு அதிகமாவதால், ஒருபொழுதும் முதல் குழந்தையுடன் விளையாடுவதைத் தவிர்த்து விடாதீர்கள். குறைந்தது ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது விளையாடுங்கள். கதை சொல்லுங்கள். அந்தக் குழந்தை பேசுவதை ரசித்துக்கேளுங்கள். அந்தக் குழந்தைக்கும் நாம் உரிய அன்பைக் கொடுக்கிறோம் என்பதை குழந்தை உள்வாங்கிக் கொள்ளும்.

  • மூத்த குழந்தையைப் பிறந்த குழந்தையிடம் சிரித்து ஏதாவது பேசச் சொல்லுங்கள். நம் தம்பி/தங்கையிடம் நாம் நடப்பவற்றைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிற பழக்கம் உண்டாகும்.
  • பிறந்திருக்கும் குழந்தை கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் பரிசு என்று மூத்த குழந்தையிடம் சொல்லுங்கள். ஆக, நம் தம்பி/தங்கை வாழ்க்கையில் நமக்கு இன்றியமையாத வர்கள் என்பதை அவர்கள் உணருவார்கள்.
  • பிறந்த குழந்தை செய்வதை, பார்ப்பதைப் பார்த்து மூத்த குழந்தை என்னவெல்லாம் செய்யும், எப்படியெல்லாம் பேசும். பார்க்கும், சிரிக்கும் என்பதை நினைவுகூருங்கள். இப்படிச் செய்வதன் மூலம் குடும்பத்தில் ஒரு பிணைப்பு ஏற்பட்டு 'நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்' என்ற வாக்கியம் மெய்யாகும்.

அந்தக் காலத்தில் சடுகுடு ஆடுவது, துள்ளிதிரிந்து மான் போல குதித்தாடி விளையாடுவது என்ற சூழல் மாறி கணினி, கைத்தொலைபேசியில் விளையாட்டுகளை விளையாடுவது என்று தொழில்நுட்பத்தின் ஆட்சியில் ஒருவர் வாழும் காலம் இது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நாடகங்களில் குடும்பப் பெண்கள் தங்களது பொழுதையெல்லாம் தொலைத்து விடுகின்றனர். என்பது பரவலான ஒரு கருத்து. ஆனால் குழந்தைகளும் தங்கள் பள்ளிக்கூடம், படிப்பு தவிர தங்கள் பொழுதையெல்லாம் கணினியிலும், தொலைபேசியிலும் தொலைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

தற்பொழுது குழந்தைகள் மனம்விட்டு வீட்டிற்கு வரும் உறவுக்காரர்களுடன் உரையாடுவது குறைந்துகொண்டே வருகிறது.உறவுக்காரர்கள் வீட்டிற்குச் செல்வது, அனைவருடனும் அமர்ந்து கலகலப்பாகப் பேசுவது, எண்ணங்களை பகிர்ந்துகொள்வது போன்ற பழக்கவழக்கங்களும் குறைந்துகொண்டே வருகின்றன . குழந்தைகளிடம் குறைந்துவரும் மற்றொமொரு பழக்கம் தானாக விரும்பி புத்தகம் வாசிப்பது.

இன்றைய சூழலில் பள்ளிகளில் பல புத்தகங்களை வாசித்து, அன்வழி பரீட்சையில் கேள்விகளுக்கு பதில் அளித்து, மதிப்பெண் X பெறும் சூழல் உள்ளது. அதற்குத் தேவையானவற்றை 'Online Search' செய்தும், சில புத்தகங்களை எடுத்து அந்தப் பாடத்திற்குத் தேவையானவற்றை மட்டும் படிக்கும் பழக்கமும் நிலவுகிறது.

ஆக, நாட்டு நடப்பைப் பற்றியும் வாழ்க்கைக்குத் தேவையான வற்றையும் குழந்தைகள் விரும்பிப் படிப்பது மிக அவசியம். மேற்கூறிய குறைகளைத் தவிர்க்கவும், சமூகத்தில் நல்ல குடிமகன்களாக திகழவும் பலவிதமான புத்தகங்களையும் விரும்பி வாசிப்பது மிக முக்கியம். சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது பெற்றோர்களின் கடமை. குழந்தைகள் அவர்களாக விரும்பிப் புத்தகம் வாசிக்க பெற்றோர் வழிசெய்ய வேண்டும். விரும்பி தானாகச் செய்யாமல், திணிக்கப்படும் எதுவும் நீண்ட நாட்கள் பழக்கங்களாக மாறுவது மிகக் கடினம். எனவே, சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த இதோ சிறு எளிய வழிகள்:

  • தூங்குமுன் குழந்தைகளுக்கு சிறு சிறு கதைகளைக் கொண்ட புத்தகங்களில் இருந்து கதைகளை வாசித்துக் காண்பியுங்கள். தினமும் ஏதாவது ஒரு புத்தகத்தை வாசித்துவிட்டுத் தூங்கவேண்டும் என்ற பழக்கத்தை குழந்தை கற்றுக்கொள்ளும்.
  • ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் அறிஞர்கள், சான்றோர்களைப் பற்றிய புத்தகத்தை வாங்கிக் கொடுங்கள். அவர்களது வாழ்க்கையைப் பற்றி வாசித்துத் தெரிந்து கொள்வதே ஒரு பெரிய வாழ்க்கைப் பாடமாக அமையும்.
  • பெற்றோர் கடைத்தெருவுக்குச் செல்லும்போது, குழந்தைகளை அருகில் உள்ள நூலகத்தில் விட்டுச் செல்லுங்கள். அப்படி நூலகத்தில் அதிக நேரம் செலவிட நேரும்பொழுது, பல புத்தகங்களுடன் அவர்களுக்கு அறிமுகம் கிடைக்கும்.

  • குழந்தை புத்தகம் வாசிக்க அலுப்பாக இருக்கிறது, நாளை வாசிக்கிறேன் என்று ஏதாவது ஒரு சாக்குக் கூறுமேயானால், நீங்கள் ஒரு பக்கம் வாசியுங்கள், குழந்தையை மறுபக்கம் வாசிக்கச் சொல்லுங்கள்.
  • மேலும் ஒரு வழியாக, தங்களுக்கு அந்தப் புத்தகத்தில் இருப்பது என்னவென்றே தெரியாது என பாவனை செய்து, 'கண்ணா,இதுல என்ன இருக்குனு நீதான் எனக்கு சொல்லணும்' என்று கூறுங்கள். அப்பொழுது குழந்தை ஆர்வமாக படித்துவிட்டு நமக்கு அது என்ன என்று கூற விழையும்.
  • தினமும் கணினியில் விளையாட்டையே விளையாடாமல் ஒவ்வொரு நாட்டைப்பற்றி ஒவ்வொரு நாளும் வாசிக்கச் சொல்லுங்கள்.

  • இப்படி வாசித்தவற்றை மாதம் ஒரு நாள் அல்லது இரண்டு வாரத்திற்கு ஒருநாள் சிறிது நேரம் என்ன கற்றுக் கொண்டாய்? உனக்கு அதில் எது சரி என்று பட்டது? நீ அதை எப்படிப் பார்க்கிறாய்? என்று உங்களுடன் பகிர்ந்து கொள்ளச் செய்யுங்கள்.
  • இப்படிச் சிறு சிறு கதைகள், அறிஞர்கள், சான்றோர்களைப் பற்றிய புத்தகம், நாட்டைப் பற்றிய வரலாற்றுப் புத்தகம் என தொடங்கி புராணக் கதைகள் வரை குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.
  • குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை எளிதாகவும், இனிதாகவும் ஆக்குங்கள். ஒருபொழுதும் வெறுப்பை ஏற்படுத்தவிடாமல் பார்த்துக்கொள்வது மிக அவசியம்.

நல்ல திரைப்படம்; நல்ல இசை; பாட்டு; அழகான ஓவியம்; நளினமான நடனம்; குலுங்க குலுங்க சிரிக்கவைக்கும் நகைச்சுவை - இன்னும் எத்தனை, எத்தனையோ நம்மைச் சுற்றி இருக்கின்றன!

ஒரு கோவிலுக்குச் சென்றால், பிள்ளையாரைக் கொட்டிக் கொண்டோம், அர்ச்சனை செய்தோம், பேசாமல் சாமியைக் கும்பிடு என்று பிள்ளைகளிடம் சொன்னோம், வந்தவர்களைப் பார்த்து மரியாதை நிமித்தமாக தலையசைத்தோம் என்று இல்லாமல், அங்கு சுவாமிக்கு செய்திருக்கும் அலங்காரங்களையும், எத்தனை வண்ணங்களில் அழகான பூக்களைக்கொண்டு அலங்காரம்செய்திருக்கின்றனர், சுவாமிக்கு அழகாக மடிசாரோடு கட்டியிருக்கும் சேலை, இப்படி ஒவ்வொன்றையும் ரசியுங்கள்.

கோவில்களில் செய்திருக்கும் நுணுக்கமான சிற்பங்களைப் பற்றி குழந்தைகளிடம் விளக்குங்கள். விஞ்ஞான வளர்ச்சி, போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத அந்தக் காலகட்டத்தில் கலையுணர்வோடு செதுக்கப்பட்டிருக்கும் சிற்பிகளின் அபூர்வத் திறனை விளக்குங்கள். அந்தக் காலகட்டத்தில் ஆண்ட மன்னர்கள், வரலாறையும், புராணங்களையும் ஆயிரமாயிரமாண்டு நிலைத்து நிற்குமளவிற்கு செதுக்கியிருக்கும் ஒவ்வொரு சிற்பமும் சொல்லும் கதையை அறிய முற்படுங்கள். அவற்றைக் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

மேலும், இப்படி நேரம், பணம், திறமையை அற்புதமாக அவர்கள் சிற்பங்கள் வழியாக வெளியிட அவர்களிடம் உதித்த அந்த சிந்தனையைப் பாராட்ட குழந்தைகளிடம் கற்றுக்கொடுங்கள்.

அதேபோல் நல்ல சினிமாவில் அந்த இயக்குநர் உருவாக்கியிருக்கும் அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றி குழந்தைகளுடன் சேர்ந்து ரசித்துப் பாருங்கள்.

ஒரு இசைகருவியைப் பார்த்தால் மனதை மயக்கும் எண்ணற்ற ஆயிரக்கணக்கான கீதங்களை அது உள்ளடக்கியிருக்கும் தன்மையைப் பார்த்து அதிசயுங்கள். இப்பொழுது எல்லா நாடு/ஊர்களிலும் எண்ணற்ற வகையில் கலைக்கூடங்கள் இருக்கின்றன. கலையை விரும்பும்குழந்தைகளுக்கு ஏதோ ஒரு கலையைக் கற்றுக் கொடுங்கள். நடனம், பாட்டு, ஓவியம் அனைத்திலும் தெய்வீகம் நிறைந்திருக்கிறது.

இப்படி ஒரு கலையை நாம் கற்றுக்கொள்ளும் பொழுது நம்முடைய சிந்தனை ஒருநிலைப்பட அதிக வாய்ப்பு உள்ளது. பல்லாண்டுகளாக உள்ள இந்த தெய்வீகக் கலைகள் குழந்தைகளிடம் புத்துணர்ச்சியை நிச்சயம் ஏற்படுத்தும்.

இந்தக் காலகட்டத்தில் குழந்தைகள் அதிக மனஉளைச்சலுக்கு ஆளாவதால், இப்படிப்பட்ட கலைகள் நல்ல ஒரு மாறுதலை ஏற்படுத்தவும். அவர்களின் மனச்சுமையை எளிதாகவும் ஆக்கமுடியும்.

இந்தக் கலைகள் அவர்களிடம் ஒரு தன்னம்பிக்கையை வளர்த்து, அவர்களது உடலையும், மனதையும் ஆரோக்கியமாக்கும். நல்ல கலைஞனாவது ஆண்டவன் கையில். ஆனால் நல்ல ரசிகனாக இருப்பது, நம் கையில்தான்.

  • வாழைப்பழத் தோலை நன்கு கழுவி பிறகு சிறு துண்டுகளாக நறுக்கி, அவற்றை அரை கப் பாலில் போட்டு பின் கலக்கி ஒரு கோப்பையில் போட்டு, குளிர்பதனப்பெட்டியில் வைக்கவும். பிறகு இதனை வறண்ட தோலின் மீது தடவுங்கள்.
  • சருமம் பளபளப்பாக இருப்பதற்கு மஞ்சள்தூள், பன்னீர், தேங்காய்ப்பால் ஆகியவற்றைக் கலந்து உடலில் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

  • ஆரஞ்சு பழத்தோலை நறுக்கி வெயிலில் காயவைத்து, பின்னர் அவற்றை அரைத்துத் தூள் செய்து கொள்ளுங்கள். அவற்றை குளிக்கும்பொழுது பாசிப்பருப்புத் தூள் மற்றும் கடலைப்பருப்புத் தூளுடன் கலந்து தேய்த்துக் குளியுங்கள்.
  • ரோஜா இதழ், பூலாங்கிழங்கு, கறிவேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் இவற்றைக் காயவைத்து பின்னர் அரைத்துத் தேய்த்துக் குளித்தால், சருமம் மிருதுவாக இருக்கும்.
  • நல்ல சந்தனத்தைப் பன்னீருடன் கலந்து அவற்றைத் தேய்த்தால் தோல் மென்மையுறும்

ஆண்டவனால் படைக்கப்பட்ட மனிதனின் உறுப்புகளுள் நம் இஷ்டத்துக்கு ஒருவரால் கூட்டவோ, குறைக்கவோ முடியும் என்றால் அது ஒன்றே ஒன்று - 'நம் தலைமுடி.' நன்றி செலுத்தும் விதமாக நம் உடம்பில் இருந்து கடவுளுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அதுவும் 'தலைமுடி'தான்.

'எனக்கு வயதாகி விட்டது' என்று நாம் சொல்லாமலே நம்மை மாட்டிவிடுவதும், வெள்ளையாகிவரும் நம் தலைமுடி தான். அப்படி நரைத்தாலும், நினைத்தால் உன் சொல்லுக்கும், செயலுக்கும் நான் அடக்கம் என்று மிகுந்த தன்னடக்கத்துடன் நம் டை, மருதாணிக்குக் கட்டுப்பட்டு திரும்ப கறுப்பு நிறத்திற்கே மாற்றிக்கொள்ளும் தன்மைகொண்டதும் நம் 'தலைமுடி'தான்.

நீ வேண்டாம் என்று நாம் எவ்வளவு வெட்டித் தூக்கி எறிந்தாலும், நன்றி விசுவாசத்தோடு மீண்டும், வட்டியோடு சேர்த்து நம் தலையில் வளர்வதும் 'தலைமுடி'தான்.

இப்படிப்பட்ட முடியைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவும், பராமரிக்கவும் இதோ சில குறிப்புகளும், எளிதான யோசனைகளும்:

  • நம் தலையில் பல்லாயிரக்கணக்கான முடிகள் இருக்கும்.
  • ஒரு மாதத்திற்கு சராசரியாக வளரும் முடியின் அளவு 1 செ.மீ.
  • ஒரு முடியின் ஆயுள் சராசரியாக 3-5 வருடங்கள்.
  • நல்ல அடர்த்தியான முடி வளர்வதற்கு புரதச்சத்து (Protein) நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
  • தினமும் உணவில் நிறைய கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் முடி உதிர்வதை தடுக்க இது நல்ல வழி.

  • தினமும் தலையில் எண்ணெய் தேய்க்கும்பொழுது, தலையின் உட்புறத்தில் கையைவிட்டு 3 முதல் 5 நிமிடத்திற்கு எல்லா பக்கங்களிலும் நன்றாகத் தேயுங்கள். ரத்த ஒட்டம் சீராக அமைய இது நல்ல வாய்ப்பு. மேலும் தலைவலி குறையவும் இது உதவும்.
  • தினம் தலை சீவும்பொழுது காலையிலும், மாலையிலும் 50 முறை சீப்பைக்கொண்டு எல்லா இடங்களிலும் சீவுங்கள். நல்ல ரத்த ஓட்டம் பெற்று முடி நன்கு வளரும்.

  • செம்பருத்தி இலை, மருதாணி இலை, கறிவேப்பிலை இவற்றை நன்கு காயவைத்துப் பொடிசெய்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தலைக்குக் குளிக்கும்பொழுது ஒரு தேக்கரண்டி எடுத்து தலையில் தேய்த்துவிட்டு (நீங்கள் உபயோகிக்கும் சீயக்காய்/Shampoo போன்றவற்றோடு சேர்த்து) குளியுங்கள். சீக்கிரம் நரை வருவதைத் தடுப்பதற்கு இது சிறந்த வழி.
  • முட்டையின் வெள்ளைத்தாரை மட்டும் எடுத்து நன்கு தலையில் தேய்த்து வைத்துவிட்டு பின்னர் நன்கு அலசிவிடுங்கள்.
  • தலைக்குக் குளித்தவுடனே, தலையில் சீப்பு வைத்துத் தலையில் விழுந்திருக்கும் முடிச்சை அவிழ்த்தால், அதிக அளவில் முடி உதிரும். ஆகவே, கையால் வைத்து முடிச்சை எடுத்து, காயவைத்துவிட்டு, சீப்பைக்கொண்டு சீவுங்கள்.

நகை பெண்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்த ஒன்று. வைரம், தங்கம் முதலியவற்றை வாங்குவதோடு தற்பொழுது நவரத்தினக் கற்கள் கொண்ட நகைகளையும் பெண்கள் விரும்பி வாங்குகிறார்கள். அணிந்தும் கொள்கிறார்கள். எகிறும் தங்க விலையும் நாட்டில் நிலவும் திருட்டு பயமும் பெண்களை One gram gold, 18kg விலை குறைந்த முத்து, பவள நகைகள் என அவர்கள் கவனத்தை அதன் பக்கம் சற்று திசைதிருப்பியும் வைத்திருக்கிறது.

எது எப்படியோ இந்தக் காலத்துப் பெண்கள் தங்கம், வைரம், Silver dipped in gold (வெள்ளி நகையில் தங்கம் நனைத்தது) என்று விதவிதமான நகைகள் அவர்களை அழகுபடுத்திக் கொண்டிருக் கின்றன

நகைகளை எப்படிப் பாதுகாப்பது? எப்படி அணிந்து கொள்வது? இதோ சில தகவல்கள்:

  • திருமணங்களில் அணிந்துகொள்ளும் பெரிய நகைகளை அனைவரும் வங்கியில் பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்கும்பொழுது, நல்ல சலவை செய்த வெள்ளை வேட்டியில் சுற்றி, அதை நகைப்பெட்டியில் வையுங்கள்.
  • பாதுகாப்புப் பெட்டியில் வைத்திருக்கும் நகைகளின் விவரத்தை ஒரு நல்ல தாளில் குறித்து வையுங்கள். ஒரு நகலை நீங்கள் உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். வங்கிக்கு நகை எடுக்கச் செல்லும்பொழுது அதனை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
  • தமிழ் மருந்துக்கடையில் 'நெய்கொட்டங்காய்' என்று ஒன்று விற்கப்படும். நெய்கொட்டங்காய் 200 கிராம், 500 கிராம் என்று வாங்கிவைத்து, அவற்றில் உள்ள கொட்டையை எடுத்துவிட்டு, அதன் தோலை நன்கு பொடிசெய்து வைத்துக் கொள்ளுங்கள்.

  • நீங்கள் வீட்டிற்கு அணிந்திருக்கும் வைரம் மற்றும் கல் பதித்த நகைகளை, ஒரு சட்டியில் போதுமான அளவு தண்ணீர் எடுத்து, பொடி செய்து வைத்திருக்கும் நெய் கொட்டங்காய்த் தூளை ஒரு தேக்கரண்டி தண்ணீர்விட்டு ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். பின்னர் வேறொரு பாத்திரத்தில் நல்ல தண்ணீர் எடுத்து, ஊறவைத்த நகைகளை தண்ணீரில் கழுவி, பின்னர் நல்ல வெள்ளைத் துணியாக எடுத்து அதில் நன்றாகத் துடைத்துவிட்டு அணிந்தால் நகைகள் பளபளப்பாக இருக்கும்.
  • தினசரி முகத்திற்கு பவுடர் பூசிவிட்டு, ஒரு நல்ல கைத்துண்டை எடுத்து உங்கள் நகைகளைத் துடைத்துக் கொள்ளுங்கள். உங்கள் நகைகள் பளிச்சென்று இருக்கும்.
  • நீங்கள் வீட்டு வேலை செய்யும்பொழுது, கையில் இருக்கும் மோதிரத்தை கழற்றிவைத்துவிட்டு வேலை செய்யுங்கள். அதேபோல் தலைக்கு எண்ணெய் தடவும்பொழுதும் மோதிரத்தைக் கழற்றிவிட்டு எண்ணெய் தடவுங்கள். அப்படிச் செய்தால் நகை எப்பொழுதும் நல்ல பொலிவாக இருக்கும்.

  • விலை உயர்ந்த நகைகள் மற்றும் விலை குறைவான நகைகள் அனைத்தையும், அருகில் இருக்கும் நகைக் கடைகளில் (நம்பத்தக்க) கொடுத்து, வருடத்திற்கு ஒருமுறை Polish செய்து வாங்கிவைத்துக் கொள்ளுங்கள்.
  • வீட்டில் வைத்திருக்கும் நகைகளை 'Jewellery Bag' என்று கடைகளில் விற்கப்படும் நல்ல அழகான பைகளை வாங்கி ஒவ்வொரு Set ஆக (மோதிரம், தோடு, சங்கிலி) என ஒவ்வொரு பையிலும் வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது தான் அவசரத்திலும் எடுப்பதற்கு ஏதுவாக இருக்கும். (பொதுவாக அந்தப் பையில் ஐந்து அல்லது ஆறு அறைகள் இருக்கும்.)
  • எந்த நகை வாங்கினாலும் அதன் தரத்தை வேறு ஒரு நகைக்கடையில் கொடுத்து உடனே சோதனை செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
  • பொன்னகையோடு சேர்த்து புன்னகையும் அணியுங்கள். உங்கள் அழகு இரட்டிப்பாகும்.

ஆள் பாதி, ஆடை பாதி. அழகாகப் பிறப்பது நம் கையில் இல்லை. ஆனால், அழகாகத் தோற்றமளிக்க பொருத்தமான உடை உடுத்திக் கொண்டால், அழகாகத் தோற்றமளிக்க நம்மால் முடியும். அதற்குச் சில யோசனைகள்:

  • சமத்துவமான நிறம் கொண்டவர்கள், நல்ல பளிச்சென்று இருக்கும் நிறத்தில் உடை உடுத்திக் கொண்டால், அவர்களின் நிறம் சமத்துவமாக அல்லாது, கொஞ்சம் பளிச்சென்று தோன்றும்.
  • பருமனாக இருப்பவர்கள், வட்டமாக கோடுபோட்ட உடை உடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். நீளவாக்கில் கோடு போட்டவை, பூ அல்லது வேறு வடிவத்தில் நெய்யப்பட்டஉடை உடுத்திக்கொள்வது சிறந்தது. அப்படிச் செய்தால் அவர்களின் பருமன் தன்மை குறைந்ததாகத் தோற்றமளிக்கும்.

  • அதேபோல் உயரமாக, ஒல்லியான உருவம் கொண்டவர்கள், நேர்க்கோடு போட்ட உடை உடுத்துவதைத் தவிர்த்து, நீளவாக்கில் கோடுபோட்ட உடை உடுத்தினால் அவர்களின் ஒல்லியான தோற்றம் சமத்துவப்படுத்தப்படும்.
  • பொதுவாக கறுப்பு நிறம் கொண்ட உடைகள் ஒருவரை ஒல்லியாகக் காண்பிக்கும்.
  • அதிகமாக நகைகள் போட்டுக்கொள்வதைத் தவிர்த்து கழுத்தில் அழகாக ஏதாவது ஒரு சங்கிலி, கையில் 4 முதல் 6 சிறிய வளையல்கள் அணிந்துகொண்டாலே எடுப்பாக இருக்கும்.

  • அடுக்களை பீரோக்களில் இருக்கும் அழுக்கை சுத்தம் செய்ய தலைக்கு உபயோகப்படுத்தும் ஷாம்பூவை சிறிது நேரம் ஊறவைத்துவிட்டுச் சுத்தம் செய்தால் எளிதாக அழுக்கைப் போக்கலாம்.
  • அடுப்பை சுத்தம் செய்யும்பொழுது அடுப்புத் துவாரங்களை Foil Sheet கொண்டு மூடிவிட்டு, பின்னர் சுத்தம் செய்யுங்கள். அப்படிச் செய்யும்பொழுது அடுப்புத் துவாரங்களுக்குள் தண்ணீர் போகாமல் தடுக்கப்படும். இப்படிச் செய்ய விழையும்பொழுது, அடுப்பு அமர்த்திவைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்யுங்கள்.
  • நீண்ட நாட்கள் உள்ள கறைகளை உப்புத் தண்ணீர் கொண்டு சிறிது நேரம் ஊறவைத்துவிட்டுக் கழுவினால், கறைகளைச் சுத்தம் செய்வது எளிது.

  • சமைக்கும்பொழுது, கழுவுவதற்கு விழும் பாத்திரங்களை உடனுக்குடன் கழுவி விடுங்கள். ஆக, வேலை சுகமாக முடியும்.
  • சமைக்கும்பொழுது நல்ல காற்றும், வெளிச்சமும் அறைக்குள் வருவதை உறுதி செய்யுங்கள்.
  • ஒரு சிறு ஒலிபெருக்கி (Radio)யை அடுக்களையில் வைத்துக்கொள்ளுங்கள். இதனால், நாட்டில் நடப்பவற்றை அறிந்துகொள்ள முடியும். நல்ல பாடல்கள் மனதையும் வேலைப் பளுவையும் எளிதாக்கும்.

  • காய்கறிகள் சீக்கிரம் கெட்டுப்போகாமல் தடுக்க, நல்ல பருத்திப் பையில் (Cotton Bag) வையுங்கள்.
  • வேலைப்பளு அதிகமாக இருக்கும் நேரத்தில், அடுத்த நாள் சமைக்கப்போகும் காய்கறிகளை முதல்நாளே நறுக்கிவைக்க நேருமேயானால், அழுத்தமான மூடிபோட்ட டப்பாவில், நறுக்கிய காய்கறிகளைப் போட்டுவையுங்கள்.
  • கீரை வகைகளை செய்திதாள்களில் இட்டு சுற்றிவைத்து விடுங்கள். தண்ணீர் கோத்து, கெட்டுப்போகாமல் இருக்கும்.
  • நறுக்கிய ஆப்பிள்பழத் துண்டுகளை உப்புப் போட்ட தண்ணீரில் போட்டுவையுங்கள். பழம் கறுக்காமல் இருக்கும்.
  • தானியங்கள் வைத்திருக்கும் பீரோவில், ஒவ்வொரு தட்டிலும் வேப்ப இலைக்கொத்தை வைத்துவிடுங்கள். வண்டு வராமல் தடுக்க இது உதவியாக இருக்கும்

  • தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் இரண்டையும் கலந்து குழந்தை (ஒரு வயதுக்குட்பட்ட)யின் மேனியில் பதவிசாகத் தடவி, 10 நிமிடம் இளவெயிலில் குழந்தையைப் போட்டு எடுத்தால், குழந்தையின் உடம்பில் இரத்த ஒட்டம் நன்றாக இருக்கும்.
  • வறட்டு இருமலுக்கு மிளகு, சீரகம், சித்தரத்தை, பனங்கற்கண்டு ஆகியவற்றைப் பசு நெய்யுடன் சேர்த்து, வெறும் சட்டியில் வறுத்து, பின்னர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். சிறிது நேரம் கழித்து அவற்றை வடிகட்டி, கசாயமாக அதைக் குடித்தால் வறட்டு இருமல் நீங்கும். (2 வயது குழந்தை முதல் இதை குடிக்கலாம்.) பச்சிளம் குழந்தைக்கு உலர்ந்த திராட்சை மற்றும் சீரகத்தை வெறும்சட்டியை வாணலியில் வைத்து வறுத்து, தண்ணீர் சிறிது ஊற்றி, அதை வடிகட்டிவிட்டுக் கொடுக்கலாம்.

  • குழந்தைகளுக்கு ஜலதோஷம் பிடித்தால், துளசியைத் தண்ணீரில் தெளித்து, வாணலியில் சட்டியை வைத்து வதக்கிவிட்டு, அதில் தேன் ஊற்றி, அந்தச் சாறைக் கொடுக்கலாம்.
  • பச்சிளம் குழந்தைக்கு வயிற்றுப் பொருமல் மற்றும் காற்று உண்டாகி ஏற்படும் வயிற்றுவலிக்கு, முருங்கைக்கீரை மற்றும் உப்பைச் சேர்த்து, அவற்றைக் கசக்கி அந்தச் சாறை தொப்புளில் சுற்றித் தடவினால், காற்று வெளியாகி குழந்தையின் வயிற்றுவலி சரியாகும்.
  • குழந்தைக்கு வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கு, மாதுளம் பிஞ்சைக் கசக்கி ஒரு தேக்கரண்டி கொடுத்தால். வயிற்றுப்போக்கு சரியாகும்.
  • வாரம் ஒரு முறை வெற்றிலையில் சிறு வெள்ளைப்பூண்டு மற்றும் சிறுமிளகு இவற்றைச் சேர்த்து, நன்றாக நைத்து விட்டு அந்தச் சாற்றைக் கொடுத்தால் குழந்தையின் ஜீரணத்திற்கு உதவும்.